Saturday, September 11, 2010

பாரதி....பாடல்களோடு பல நினைவுகள்



ஒளி படைத்த கண்ணினாய்  வா.வா. வா..உறுதி கொண்ட நெஞ்சினாய் வா. வா, வா... 
வா. வா. வா.  என முன்று `வா` க்களில் ஈர்க்கப்பட்ட குழந்தை கவிஞன். நான் பெரிதாக பெரிதாக பாரதியின் பிம்பமும் உயர்ந்து கொண்டே வந்தது
ஏழாம் வகுப்பில் படிக்கும் பொழுது `சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்`` என்று சிந்துநதியின்மிசை பாட்டை ஒன்பதாம் வகுப்பு அண்ணா ஒருவர்  பள்ளி பாட்டு போட்டியில் பாடி பரிசு பெற்றதை அடுத்து , நாங்களும் பெரிதாக அர்த்தம் தெரியாமல் பாடி வருவோம் ``சேர நன்னாட்டிளம் பெண்களுடனே `` சின்ன வயதில் இந்த வரியின் மீது ஈர்ப்புக்கிற்கு இளம்பெண்களை விட நாங்கள் சேர நன் நாட்டில் இருந்தது தான் காரணம்  . சேர நாட்டில் இருப்பதற்கான சாட்சியாக  அப்போதைக்கு எங்கள் அறிவிற்கு எட்டியது  கோவையில் ஓடிய  சேரன் போக்குவரத்து கழக பேருந்துகள் தான்


காக்கை சிறகினிலே நந்தலாலா...பாட்டில் நந்தலாலா வின் ஈர்ப்புநின்னை தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா வரை பாட வைக்கும்

வறுமையின் நிறம் சிவப்பு  படத்தில் கமல்  அங்கங்கு  பாரதியின் வரிகளை சொல்வது  பிடிக்கும் .அதில்  வெள்ளை நிறத்திலொரு பூனை பாட்டை கமல் அழுத்தி சொல்வது மிக பிடிக்கும். படத்தில் கடைசியில்  நல்லதோர் வீணை  செய்தே பாட்டு உருக்கத்தை வரவைக்கும் . அதில் விசையுறு பந்தினைப்போல்  வரி எப்பொழுது கேட்டாலும் புல்லரிக்க வைக்கும்.

பொள்ளாச்சி  பாலிடெக் காலங்களில் , பாரதி பற்றி படம் எடுத்தால் வேஷ பொருத்தம்  கமலுக்கா, ரஜினிக்கா என விவாதம் சூடு பறக்கும். என் பெஞ்சு நண்பன் கிறிஸ்டி,  ரஜினியை சிலாகிப்பான். நான் கமல் தான் பொருத்தம் என்பேன் . கிறிஸ்டி நன்றாக வரைவான் . நகாசு வேலைகள் செய்து கனப்பொருத்தமாக பாரதிக்குள் ரஜினியை பொருத்தியிருந்தான் .


கோவை ஜிசிடி முதலில் சென்னை பல்கலைகழக கட்டுப்பாட்டில் இப்போழுது அண்ணாபல்கலைக்கு மாறியுள்ளது நடுவில் நான் பயின்ற பொழுது பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து, அதில் பட்டம் பெற்றது எனக்குள் இருக்கும் பாரதிசார்பு மகிழ்வு.


அச்சமில்லை  அச்சமில்லை  பாடலில் , இச்சகத்துமாந்தர் அனைவரும், துச்சமாக மதிப்போர்,கச்சணிந்த மாதர், நச்சளிக்கும் நண்பர், உச்சிமீது இடியும் வானம்  இப்படி பாரதியின் பட்டியல் சற்று வித்தியாசமாக இருந்தாலும்,பாடல் மனதிற்கு ஒரு தைரியத்தை உண்டாக்கும்.


கமலின் மகாநதி படம் வெளிவந்ததை தொடர்ந்து,தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி  பாடல் இன்று இளைஞர்களுக்கு தங்களை சுற்றிலும் நடக்கும் தீமைகளை கண்டு வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வெகுள உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது.


எனது செல்லம்மாள், பாட்டுப்போட்டிக்காக, மகனுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது  நிற்பதுவே  நடப்பதுவே பாட்டை பயிற்சி கொடுத்தபொழுது, காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ போன்ற ஏற்ற இறக்க வரிகளோடு அப்பாடல் நன்றாக பதிந்தது.


எண்ணிய முடிதல் வேண்டும்..  ஒரு பிரார்த்தனை பாடலாகவே மனதுள் வைத்துள்ளேன்.


தண்ணிர் விட்டா வளர்த்தோம், சர்வேசா , கண்ணீரால் காத்தோம்  கருகத்திரூளோமா என்று மேற்கோள் காட்டி உரையாற்றிய ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல்  அடிக்கடி பாரதியின் பாடல் வரிகளை நினவு படுத்தி உரையாற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வரையிலும் பாரதியின் பாட்டுவரிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஒரு இனிமையான உணர்வு வரும்.


பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம் பாடல் சமிப காலத்தில் பலரால் பாராளுமன்றத்தில் மகளீர் மசோதா உரையில் ஒலிக்க கேட்கிறோம்...


பக்தி, வீரம், விடுதலை,காதல்,இயற்கை  என பலதலைப்புகளில்  பாடல் இயற்றிய பாரதி தனது பார்வையை, முழுமையான ஞானத்திற்கு  கொண்டு சென்றான். தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் அவசரமாக இயற்கையிடம் செல்லாமல்,  நீள் ஆயுள் பெற்றிருந்தால்  இப்போதிருக்கும் போலி ஆன்மிகத்தையும் போலி பகுத்தறிவு வாதங்களையும் தன் எழுத்து திறத்தால் ஒழித்து உதறியிருப்பான், 


காக்கை குருவி யெங்கள் ஜாதி..நீள் கடலும் மலையு மெங்கள் கூட்டம் : நோக்குந்திசையெலாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக்களி யாட்டம். மேம்போக்காக பார்த்தால் இப்பாடல் ஜாதி, கூட்டம் , மகிழ்வு என இருக்கும் . ஆனால் பாரதி ஞான அறிவு நிரம்பியவன். ஆழமான தத்துவத்தை வைக்கிறான்..இதை தத்துவஞானி வேதாத்திரி அவர்களால் சிறப்பாக பார்க்கப்பட்டது... நீ , நான் என்பதெல்லாம் அணுக்கூட்டம் அன்றி வேறில்லை  அதுபோல கடலும் மலையும் அணுக்கூட்டம் தான்.  நமக்கும் உடல், வலி, உணர்வு இருக்கிறது, பறவை விலங்குகளுக்கும் அவ்வுணர்வுகள் இருக்கிறது.எனவே  எல்லாம் ஒரு ஜாதிதான். இப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டால் வெறுப்பின்றி மகிழ்வோடு இருக்கலாம்.



நாங்கள் அடிக்கடி வீட்டில் கேட்கும் பாடல், நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப்பூண். பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ.  



இன்று பாரதியின் நினவு நாள் ,நினைவு போற்றுவோம்..

வாழ்க தமிழ்..வாழ்க பாரதி....

Wednesday, September 1, 2010

திருவாளர் ஞொய்யாளு--நம்மாளு

மோகன்ஜி அவர்களின் அன்பான அழைப்பிற்கிணங்க ஞொய்யாளு வை பிரபலமாக்கும் முயற்சி.

முன்குறிப்பு :
ஞொய்யாளு நம்மாளு....  வடக்கு,தெற்கு, சாதி, மத இன மொழி இதற்கெல்லாம் சிக்காத ஜீவன். நம்மளை சிரிக்க வைக்கறது ஒன்னு தான் அவர் வேலை.
இனி அவர் படும் பாடு...நம்மை படுத்தும் பாடு.

ஒரு தடவை நம்மாளு ஞொய்யாளுவும் அவரது நண்பர் சிகாமணியும் பயணம் செய்ய டபுள் டெக்கர் பஸ்ல ஏறினாங்க . படிக்கட்ட பார்த்தவுடனே குஷியாகி நம்மாளு குடு குடு ன்னு மாடிக்கு போய்ட்டாரு. சிகாமணி கிழ் பகுதியில் உட்கார்ந்தாட்டாரு.  திடீர்னு ஞொய்யாளுக்கிட்டருந்து ஒரு `ஓ`ன்னு பெரிய சவுண்டு . சிகாமணி ஓடிப்போய் என்னன்னு கேட்க,  வெல வெலத்த நிலையில் ஞொய்யாளு ,சிகாமணியிடம், `` உனக்கென்னப்பா  கீழ வண்டிக்கு டிரைவர் இருக்காரு, மேல பாரு, டிரைவர் யாருமில்லாம தானா ஓடீட்டு இருக்குது. எப்ப எது ஆகுமோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்.. சமாதான படுத்தறதுக்குள்ள சிகாமணி ஒரு வழியாய்ட்டாரு.

சிகாமணி, நம்ம ஞொய்யாளுக்கு வாகனபயம் போக்கி , வண்டியெல்லாம் பயிற்சி கொடுத்து, டிரைவிங் லைசன்சும் வாங்கி கொடுத்துட்டாரு. டிரைவர் வேலைக்கு இண்டெர்வியு போன எடத்துல  அந்த முதலாளி ஸ்டார்ட்டிங் சேலரி முவாயிரம் , மீதி அப்பறம் பார்க்கலாம்னு சொன்னார்.உடனே நம்மாளு ஞொய்யாளு, ஸ்டார்டிங்க்கு ஓக்கே அப்பறம் ரன்னிங் எவ்ளோ தருவீங்கன்னாரு .. நம்மாளு சாதாரண ஆளா? அவ்வளவு சீக்கிரம் ஏமாறுவதற்கு. அந்த முதலாளி தலையில் அடிச்சிட்டே  கிளீநர் வேலை தந்தாரு.
வேலை கெடச்சவுடனே, சிகாமணி , ஞொய்யாளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும் பொண்ணு பார்க்க போனாங்க.. போன இடத்துல நம்ம ஞொய்யாளு, பொண்ணுகிட்ட வயசென்னன்னு கேட்க்க , அந்த பொண்ணு உங்கள விட ஒரு வயசு கூடன்னு சொல்ல, இதை கேட்ட சிகாமணி ,இது ஒத்துவராதுன்னுட்டு கெளம்ப , நம்ம நாணயஸ்த்தன் ஞொய்யாளு , ஏன் ஒத்துவராது? ஒரு வருஷந்தானே, அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிகிட்டா போச்சுன்னாரு. இனி அந்த பொண்ணு திரும்பி பார்க்குமா என்ன?

ஒரு நாள் நம்ம ஞொய்யாளு, பர்மா பஜார் போய் ஒரு டி.வி.டி பிளேயர் வாங்கிவர கெளம்பிட்டாரு, அதை பார்த்த சிகாமணி,  ``  பாத்துப்பா ஞொய்யாளு, அங்கெயெல்லாம் வெல கன்னாபின்னான்னு சொல்வாங்க,  என்ன விலை சொன்னாலும் பாதி வெலைக்கு கேளு`` வெவரமா கேட்டுட்ட பர்மா பஜார் போய் சேர்ந்தாரு. ஒரு கடையில்
        ஞொய்யாளு : இந்த டிவிடி பிளேயர்  என்ன 
                      வெலைப்பா....
        கடைக்காரர் : நாலாயிரம் ருபாய்.
               ஞொ : என்னப்பா இப்படி விலை சொல்ற, 
                     ரெண்டாயிரத்துக்கு தரமுடியுமா?
              க.கா :ம் ம் அதெல்லாம் முடியாது 
                    முவாயிரத்துக்கு வேணா தரலாம்.
             ஞொ : அப்ப ஆயிரத்து ஐநூறுக்கு தர முடியுமா.
              க.கா : என்னப்பா உன்னோட கொடுமையா
                     இருக்கு.. இது மொத போணி,      
                     சரி நீ முதல்ல கேட்ட 
                     ரெண்டாயிரத்துக்கே எடுத்துக்க.
             ஞொ :  அப்ப ஆயிரத்துக்கு தாப்பா..
              க.கா : உன்னோட ஒரே ரொதனையா
                    போச்சுப்பா காசே வேண்டாம் 
                    இதை சும்மாவே எடுத்துக்க .
                    எடுத்துட்டு எடத்த காலிபண்ணு சீக்கிரம்..
             ஞொ : அப்ப ரெண்டு குடுப்பா....
              நம்மாளு ஞொய்யாளு-  கணக்குல புலி..இது யாருக்குமே புரியமாட்டங்குது .... கடைசியில் கடைக்காரர், ``வசமா ரெண்டு குடுத்து `` அனுப்பிச்சாரு.

பின் குறிப்பு :  முன் குறிப்பு போட்டா, கண்டிப்பா பின் குறிப்பும் போடனும்னு, நாமே போட்டுக்கிட்ட விதி. மேல குறிப்பிட்ட ஞொய்யாளுவின் லீலைகள்  வலையிலிருந்து சுட்டு எடுத்து வந்தாலும் , நம்ம வானலியிலும் நல்லா வணக்கித்தான் பரிமாறப்பட்டுள்ளது.  
இந்த பதிவின் சிறப்புகளை,  பதிவு போடச்சொன்ன 
அருமை நண்பர் வண்ணமயமான 
வானவில் மனிதனுக்கு உரித்தாக்குகிறேன். 
அடுத்து இந்த விளையாட்டை , 
தீராத விளையாட்டு பிள்ளை யிடம்
ஒப்படைக்கிறேன். 


Powered By Blogger