Thursday, March 31, 2011

பெயராம் பெயர் ....

இனிய  தம்பி   எல்கே யின்   தொடர் அழைப்பிற்கு  மிக்க நன்றியோடு  வி....ரை......வா........க  இந்த பெயர்ப்  பதிவு .......
ஆவணி மாதம் ஒரு முழு நிலவு நாளன்று  தென்னகத்து மலைகளின் ராணியான  உதகையில்  உதயமானேன்...

                              ( உருண்டு ஆடிய ஊட்டி கார்டன் )

ஆவணிமாதம் என்றாலே பண்டிகைக்கும்  விரதங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்..வேறு பொழுது போக்குகளே இல்லாத அந்த கால கட்டத்தில்  வெகு சிரத்தையாக  விரதங்களை கடைப்பிடித்து  விழாக்களை கொண்டாடி மகிழ்வர் எங்கள் குடும்ப முன்னோர்கள் . இப்பொழுது அந்த வரிசையில் விநாயகர் சதுர்த்தி மட்டும் பரவலாக மிஞ்சி நிற்கிறது.

அன்றைய தினம்   அனந்தவிரதம் எனும் விஷ்ணுவை பூஜிக்கும் பண்டிகையன்று பிறந்ததால்  தாத்தாக்கள் பெயர் தேடும் படலத்தில் எந்த சிரமமும் படாமல்    அனந்தபத்மநாபன் எனும் பெயரை   தேர்வு செய்து விட்டார்கள் .   நெல்லில் பெயர் எழுதி  புரியாத சிசுவான  என்  காதில் மூன்றுமுறை பெரியவர்கள் ஓதியதாக அம்மா சொல்ல, சற்று புரியும் காது ஆனவுடன் கேட்டுக்கொண்டேன் ...

அந்த பெரும் பெயரின் இடைஞ்சல்கள்  முதலில் புரியவில்லை ..ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்  பதிவேட்டில் கையொடிய எழுதும் போதெல்லாம் திட்டித் தள்ளியிருப்பார்கள்..  பத்து வகுப்பு படிப்பதற்குள் பத்து பள்ளிகள்  . ( பள்ளிகளின் நினைவு கொசுவத்தியை  தனியாக பத்த வைத்துக்கொள்ளலாம் )


அனந்தன் , ஆனந்தன்  என இருவாறு  பள்ளி நாட்களில்  அழைக்கப்பட்டு  கொண்டிருந்தேன் . பத்மநாபன்  படத்துக்கே வராத பெயராக இருந்தது. பத்தாம் வகுப்பில் தான் பெயர்  கெஜட்டப்படும் .. விவரமறிந்து  அந்த சமயத்தில்  சுருக்குபவர்களுக்கு  நல்ல வாய்ப்பு . என்கதையில் நடந்தது  வேறு   மதிப்புக்குரிய எனது  அறிவியல்  ஆசிரியர்  பழனிசாமி  அவர்கள்  முன்று  H  களை அங்கங்கு  சொருகி  பெயரின் நீளத்தை இன்னமும் ஒருமைல் கூட்டினார்...   எழுத்துக்கள் கூட்டிய ராசி, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று  நெகமம் எம்.எல். ஏ அவர்களால்  பரிசு  கிடைக்கபெற்றது      

பாலிடெக் /  கல்லூரி காலங்களில்    அனந்து, பத்து  என சுருக்கமாக அழைக்கப்பட ,  ஆசிரியர்களுக்கும்  எழுத்தர்களுக்கும்  முதல் பெயராக  பெரிய பெயர் எழுதும் /  தட்டும்  சிரமத்திற்கு உள்ளாக்கினேன் .. 


வேலைக்கு வந்த காலத்தில்  முழு பெயராகவே உச்சரிக்கப்பட்டது .. சத்தம் மிகுந்த தொழிற்சாலை  பணிநாட்களில் சீனியர் எஞ்சினியர் ராமசந்திரன் அவர்கள்  தூரத்தில் இருந்து  ஜாடையில்   ஆட்களை  தேடி  விசாரிப்பது  வேடிக்கையாக இருக்கும் .  ஃபோர்மேனை தேட நான்கு விரல்களை காட்டுவார். என்னைத்தேட பத்து விரல்காட்டுவார். பத்து...பத்து

இங்கு வெளிநாட்டில் நானே சுருக்கி சொல்லும் பத்மநாபனை சுருக்கி Paddy, Padi, Pad , Padma, Padman. என அவரவர் நாட்டிற்கு தகுந்த உச்சரிப்பில் படுத்துவார்கள்... அலுவலக பதிவேடுகளில் பாஸ்போர்ட் உள்ளவாறு பெயரை விரிக்கவேண்டும் என அப்பா பெயரை சேர்த்து கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் ஆக்கி  பெரிதாக்கினார்கள்... இப்பொழுது புதிதாக பணிமாற்றத்தில் விசா அடிக்கும் பொழுது தாத்தா பெயரில் (லக்ஷ்மி நாராய  ணன்)  பாதியை சேர்த்து போட்டு கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மி என இன்னமும் பெரிதாக்கி விட்டார்கள்.. எங்க வீட்டு சென்டிமெண்ட் லக்ஷ்மி அப்படியே லக்ஷ்மிகரமாக இருக்கட்டும் என சொல்லிவிட்டார்கள்.. இந்த முழுப் பெயரில் அயல் நாட்டினர் எதை எடுத்து எப்படி சுருக்க போகிறார்களோ?

இந்த தொடர் கிட்டத்தட்ட ஒரு முழுச்சுற்று வந்துவிட்டது.  விடுபட்ட நண்பர்கள் தொடரலாம் ... பொறுமையாக படித்ததற்கு நன்றி ....அழைத்த தம்பி எல்.கேக்கு மீண்டும் நன்றி...








Powered By Blogger