Thursday, August 12, 2010

கடவுளும் நானும்

     கடவுளும் நானும்


இந்த தொடர் பதிவிற்கு  அழைத்த பதிவு எக்ஸ்பிரஸ் , அப்பாவி தங்கமணி  அவர்களுக்கு நன்றி......
``கடவுள்`` மிக சின்ன வயதில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. பல வீடுகளையும் போல் பண்டிகை பலகாரங்களும், வினாயகர் சதுர்த்தி வகை வகையான  கொழுக்கட்டைகளும் உற்சாகம் எற்படுத்தி கடவுளை கும்பிட வைக்கும்.  ஆனால் ``கடவுள் இல்லை `` எனக்குள் பெரிய தாக்கத்தை எற்படுத்தியது. நாத்திகம் ,ஆத்திகம் என்று எதுவும் அறியாத  நிலையில்  விளையாட்டுத்தனமாக ஆரம்பித்து, காரணம் புரியாமல் கடவுள் மறுப்பு திவிரமாகி க்கொண்டது.

ஆலாந்துறையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நட்பு ரீதியாக நண்பர் வீட்டில் கடவுள் உண்டா? இல்லையா?குட்டி பட்டிமன்றம் நடத்தப்பட்டது.. நண்பன் சிவா வும் இன்னொரு நண்பனும்  ``உண்டு`` டீம். நானும் சிவா வின் தம்பி சோமுவும் இல்லை`` டீம் .சிவா வின் அக்கா நடுவர். சிவா எங்கள் வீட்டில் சாமி கும்பிடும் முறையெல்லாம் எடுத்து கூறி வந்தவன்,  எனது நெற்றியில் திருநீறு இருப்பதை பார்த்து தாழிச்சு எடுத்து விட்டான் .
நானும் அவசர,அவசரமாக எழுந்து , இது பெரியவர்களை மதிப்பதற்க்காக , அவர்கள் சொல்பேச்சு கேட்பதற்க்காக என்று சொல்லி , விபூதி எதிலிருந்து வருகிறது என்று சொல்ல சொல்ல ,வாக்குவாதம் இந்த கால சட்டசபை மாதிரி கைகலப்பில் கொண்டு போய்விட, நடுவரக்கா ஓடி ஒளிய , தீர்ப்பில்லாமல் முடிந்தது. 
இப்படி ஒன்பதாம் வகுப்பிலும் தொடர்ந்தது,  பள்ளிமுடிந்து தோட்ட வயல் வழிகளில் நடந்து வரும் பொழுது , கிணற்றில் நீச்சல் அடித்து விளையாடுவது வழக்கம் . கிராமத்தில் அவை எங்களுக்கு நீச்சல் குளங்கள்   30 / 40 அடி உயரத்திலிருந்து அனாயசமாக குதிப்போம்.  ஒரு நாள் அப்படி குதிக்கும்பொழுது ,நான் ``முருகா காப்பாத்து `` என்று சொல்லி குதித்ததை கவனித்த ``உண்டு`` நண்பன்  என்னை ``உண்டுஇல்லை`` ஆக்கிவிட்டான்.
’’நெற்றி விபூதியும் ‘’, ’’முருகா காப்பாத்து’’ம் மாதிரி  சின்ன, சின்ன சம்பவங்கள் பிற்காலத்தில் பல புரிதலுக்கு துணை புரிந்தது.


தொடர்ந்த கிராம வாழ்க்கையில், முருகன் பாடல்களும், கருப்பராயசாமி அபிஷேகங்களும், மாகாளியம்மனுக்கு நீர்யாத்திரைகளும்,  பக்தியான சாமியாட்டங்களும், பாசாங்கான  அருள் கூறல்களும் ஒரு கொண்டாட்டம் என்ற அளவில் இருந்தது.  ஆனால்  ’’இல்லை’’யில்  எதோ இழந்து கொண்டிருப்பது போல்  உணர்வு.
 ஒரு கட்டத்தில் ,  ``இல்லை`` நண்பர்கள் கொஞ்சம் சேர்ந்தார்கள்.  இஞ்சி தின்ற குரங்கு கள்ளும் குடித்த கதையாக எதிலும் அவ நம்பிக்கை ,எனக்கு வாய்த்த இ.நண்பர்களோ வாய் திறந்தால் கெட்ட வார்த்தைகள்,அதுவும் கிராமத்தில் கேட்கவே வேண்டாம்.படிப்பிலும் நாட்டமில்லாமல் போய் விட்டது , பழகுவதற்கும் மக்கள் குறைந்து விட்டார்கள்.


நாளாக ,நாளாக  ’’கடவுள் இல்லை ‘’ பெரும் அவஸ்தை ஆகிவிட்டது , இதிலிருந்து முதலில் வெளி வரவேண்டும் என தோன்ற ஆரம்பித்துவிட்டது .உண்டு ,இல்லை என்பதை விட கடவுளின் தேவை புரிய  தொடங்கியது .

( தொடரும்--விரைவில்)  


பின்குறிப்பு :'' தொடர் பதிவிற்கு தான் அழைத்தேன், தொடரும் பதிவிற்கல்ல''...  இப்படி ஒரு குரல் கனடா நாட்டிலிருந்து கேட்கிறது. படிக்கவரும் நண்பர்களை சீக்கிரம் அனுப்பினால் ,அடுத்த பதிவிற்கு எட்டிப் பார்ப்பார்கள் எனும் ஒரே காரணத்திற்க்காக  பிரித்து போடுகிறேன்.
சிவாஜி எம்.ஜி.ஆர் அவர்களோடு இப்பதிவின் தொடர்ச்சி விரைவில் ....
Powered By Blogger