Saturday, January 30, 2010

வாழ்க்கை விதி ---- 90 / 10






''திறமையே அதிர்ஷ்டம் '' இது நம் சிந்தனை எழுத்தாளர் எஸ் ..ரா , இந்த வார விகடனில் நம் மீது ''சிறிது வெளிச்சமாக '' அடித்த பெரிய வெளிச்சம் ....

 இதை படித்து முடித்தவுடன் ,என் மின்னஞ்சலை நிரவியதில்.....நண்பரின்   மின்னஞ்சல் ஒன்று 90 / 10 Principles - Written by Stephen covey
writer of 7 Habits of Highly effective people ...

ஸ்டிபன் கோவி , வாசிப்பவர்களின் இனிய நண்பன் , இழுத்து உட்கார வைத்து முழுதும்  வாசிக்க வைப்பார் .. எஸ் ..ரா , மாதிரியே ....

ஸ்டிபன் கோவி, என்ன சொல்றார்னு பார்ப்போம் .....

முதல் திறமை , நிலைமையை எப்படி கையாள்வது ........

  தொண்ணூறுக்கு பத்து விதி ... இந்த விதிதான் நம் தலை விதி என்கிறார் .
  ( இதை படிப்பது அதில் சேர்த்தி இல்லை )

  நம் வாழ்க்கையை மாற்றும் , குறைந்த பட்சம், நிலைமையை சீராக
  கையாளும் வித்தையை கற்று கொடுக்கும் இந்த விதி....

 அதென்ன தொண்ணூறு ? அப்புறம் பத்து ?

நம் 100 சதவிகித வாழ்க்கையில் , 10 சதவிகிதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நம்மை தாக்கவரும் சம்பவங்கள், பிரச்சினைகள் ... 90 சதவிகிதம் நம் கட்டுப்பாட்டிலும் ஆளுமையிலும் உள்ள அதற்க்கான தீர்வுகள் , அதை கையாளும் முறைகள் .


போக்குவரத்தில் சிவப்பு விளக்கு எரிவது நம் கட்டுபாட்டில் இல்லை .. ஆனால் அதற்க்கு கட்டுப்பட்டு செல்வது நம் ஆளுமையில் தானே .....


ஸ்டிபன் கோவி சொன்ன உதாரணத்தை , நம்ம ஊர் பாணியில் பார்ப்போம் ...

ராம் , ராஜி , அவர்களது செல்லமகள் அபி சேர்ந்து காலை சிற்றுண்டிக்கு அமர்கிறார்கள் ....வேலைக்கு , பள்ளிக்கு செல்லும் பரபரப்பு ...
அபி , தண்ணீர் கோப்பையை எட்டி எடுக்கும் பொழுது , கை தவறுதலாக காப்பி கோப்பை தட்டி விட ராமின் அலுவலக சட்டையில் காப்பி  சிந்தி வழிகிறது... வந்ததே ராமிற்கு கோபம் , கன்னாபின்னாவென்று அபியை திட்டி, அதோடு அடங்காத கோபம் , குழந்தைக்கு நான்கைந்து பளார் பளார் ... செல்லுமிடத்து சினம் .

குறுக்கே வந்த   ராஜிக்கும் சரியான திட்டு ... நல்லா வளர்த்தியிருக்க ......வாக்கு வாதங்கள் ..... நிமிடங்கள் தொலைந்தன ... குழந்தை அழுது ஓயவில்லை ... உணவு மறுத்தாள்... பள்ளி பேருந்து போயே போய் விட்டது... ராம் பதட்டமாக மாடிக்கு ஓடிச்சென்று , அலமாரியில் எல்லாம் கலைத்து , மற்றொரு சட்டையை எடுத்து , பொத்தான்களை மாற்றி மாற்றி ஒரு வழியாக சரியாக போட்டு கொண்டு , அழும் மகளை காரில் போட்டு,, அலுவலகம் போகும் வழியில் பள்ளியில் விட்டான் .. அபி திரும்பி கூட பார்க்காமல் .... இவனும் வற்றாத கோபத்தோடு , 50 இல் செல்லும் வேக பாதுகாப்பு பகுதியில் 100 இல் செல்ல , போக்குவரத்து காவல் '' அதி வேகம் '' என்று தண்டம் வைத்தது.... அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்து விட்ட அலுவலகத்தில் இறங்கியவுடன் பார்கிறான் ... அலுவலக ''சுருக்'' பெட்டியும் , மடி கணினியும் வீட்டிலேயே மறந்து வந்துள்ளான் ... மோசம் .... தொடர்ச்சியாகி ---மிக மோசத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ...

   மோசங்களுக்கும் பின் தொடர்ந்த மோசங்களுக்கும் என்ன காரணம் ?

அ ... சிந்திய காப்பி .

ஆ ... தவறுதலாக தட்டிவிட்ட அபி .

இ ... ராம் ..ராமின் எதிர் வினை

எல்லோர்க்கும் தெரிந்த பதில் தான் '' இ ''

காப்பி தவற விடப்பட்ட சம்பவம் ராமின் கட்டுபாட்டில் இல்லை .

  அப்படி இருந்தாலும், அன்று அவன் மீது திணிக்கப்பட்ட பிரச்சினையின்
  தாக்கம் 10 சதம் தான் .. ஆனால் அப்பிரச்சினையின் தீர்வும் ,  
  பின்விளைவுகளுமான 90 சதம் முழுக்க முழுக்க அவன்
  கட்டுப்பாட்டில் ,ஆளுமையில் தான் இருந்தது

   என்ன செய்திருக்கலாம்? ....அதே சூழ்நிலையில்......

   காப்பி தவறுதலாக தட்டிவிடப்படுகிறது ,அபி குரலெடுத்து    
   அழ ஆரம்பிக்கிறாள் .. ராம் அரை வினாடிக்குள் சுதாரித்து ,
   தன் மகளை  '' செல்லம் , ஒண்ணும் இல்லடா ... கூல்.....  கூல் ,
   அப்பா  பார்த்துக்கிறேன் , நீ   சாப்பிட்டிட்டு,, ஸ்கூல் க்கு  
    கெட் ரெடி ... கெட்  ரெடி ...    '' எந்த நேர இழப்பும் இல்லை .

நிதானமாக , சட்டையை மாற்றிகொள்கிறான்... '' சுருக்'' பெட்டியும் , மடிக் கணினியும் எடுத்து கொண்டு ஜன்னல் வழியாக பார்க்கிறான் .
அபி மகிழ்ச்சியாக, தன் பள்ளி தோழிகளை பார்க்கும் உற்சாகத்தில் செல்கிறாள் ...எதேச்சையாக திரும்பும் அவள் , அப்பாவை பார்க்கிறாள்
அழகான கையசைப்பு .. இவனும் பூரிப்பாக மகளுக்கு, பறக்கும் பாச முத்தம் கொடுக்கிறான் ... கார் எடுக்கிறான் , இனிமையான இசையோடு
10 நிமிடம் முன்னமே அலுவலகம் வந்து சேர்கிறான் ... அலுவலகத்தில் சுகம் ... சுகம்... எல்லாம் சுகம் ..

ஒரே சம்பவம் , இரு வேறு அணுகு முறைகள்,
இரு வேறு முடிவுகள் ..
ஒன்று சிக்கலான மோசமான முடிவு,
மற்றொன்று சுலபமான சுகமான முடிவு.

எல்லா பிரச்சினைகளையும் 90 - 10 விதியில் புடம் போட்டு சுக தீர்வு காணலாம் ... சாதிப்போம்..

நம் கட்டுப்பாட்டில் இல்லா 10 சதம் வாழ்க்கை பிரச்சினைகள் , 90 சதம் நம் கட்டுப்பாட்டிலே உள்ள வாழ்க்கை தீர்வுகள்....

  திறமையை வளர்த்து கொள்வோம் . அதற்கு பெயர் வேண்டுமென்றால் ''அதிர்ஷ்டம் '' என்று வைத்து கொள்ளலாம் ....


Saturday, January 9, 2010

பிரபஞ்சம் -- 2009

வானத்தில்  பல வர்ணஜாலம்..       



நம்மை படைத்து காப்பவனுக்கு  எப்பவுமே தீபாவளிதான் ..
இப்படி வர்ணங்களை   பார்த்துக்கொண்டே  இருப்பதனாலேயே நொடி பொழுதும் ஓயாம இருக்கிறான் ..  விஷயத்துக்கு வருவோம்..........
மேலே நீங்கள் பார்க்கும் உடுமண்டலம் ....அண்டத்தீவு ....  கேலக்ஸ்சி  ... இப்போதைக்கு  NGC 4522  என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ...


நம்ம பம்பரம் சுற்றும்  உடுமண்டலத்திற்கு உள்ள அழகான பெயர்  பால் வீதி   ( இன்னமும் அழகா  ஆகாய கங்கை ) என்று சொல்வது மாதிரி  இந்த உடுமண்டலத்திற்க்கும்  பெயர்  தேடிக்  கொண்டு  இருக்கிறார்கள்  ( எண் , சொல் கணக்கு ஜோதிடர்கள் முன் வரலாம் ).....
இந்த சுருள் உடு மண்டலம் நமது பால்வீதி மண்டலத்திற்கு  மிக (??????) அருகில் இருக்கிறது  அதிகமில்லை  .. சற்றேறக்குறைய ஆறு கோடி ஒளி ஆண்டுகள் தூரம் தான்....அது அங்கு சும்மா இல்லை  ...மணிக்கு  ஒரு கோடி கி. மீ  வேகத்தில் சுழன்று  சுழன்று நகர்ந்து கொண்டே இருக்கிறது.... அந்த சுழலினால் அளவற்ற  வாயுக்களும்  , தூசிகளும் விசிறி அடிப்பதனால் ஒளிக்கீற்றுக்கள்   மிகுந்து   நமக்கு வர்ணஜாலமாக இந்த அற்புதமான  படகாட்சி  ஹப்பிள்  விண் தொலைநோக்கி வழியாக கிட்டியது.


இந்த மண்டலத்தில் கவித்துவமாக சிதறும் விண்மீன் கூட்டங்களை , இவ்வருடம்  நம் உலக  வான் ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தொலை நோக்கியில் நெருங்குவார்கள் ...... கவிஞர்களுக்கு    கொண்டாட்டம் தான் .....

Monday, January 4, 2010

முதல் பதிவு -சுஜாதாவிற்கு சமர்ப்பணம் .

    வலைப்பூக்கள் தொடுப்பவர்களின்  முன்னோடி
                              இணையத்தமிழ் இமயம் 

சுஜாதாவை  பற்றி, எழுத்தாளர் முருகன்,  ஒரு கட்டுரையில் .....(அப்படியே முடியாவிட்டாலும் சாராம்சம் )


'''''நான் இந்த அளவிற்கு கதை ,கட்டுரை, கவிதை எழுதுகின்றேன் என்றால் சுஜாதாவை வாசித்ததனால் தான் .. இதை நான் மட்டுமல்ல தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 1000 பேர்களாவது, அவர்களது கட்டுரையில் எங்காவது ஒரு இடத்திலாவது மேற்சொன்ன வாசகத்தை ஒட்டியிருப்பார்கள் . ஒட்டவேண்டும் . ஒட்டவில்லை என்றால் அவர்களுக்கு வாத்தியார் பாணியில் சொன்னால் இன்று இரவு சாப்பாடு கிடைக்காது '''
என்று எழுதி இருப்பார் ...எனக்கு ரெண்டு சப்பாத்தியாவது வேண்டும் தூங்குவதற்கு முன் .... எனவே நானும் நன்றிகடனாக , சமர்ப்பணமாக , முதல் பதிவாக என் ''ஆனந்த வாசிப்பில்.........


' கதை, கட்டுரை ,கவிதை , சினிமா, அறிவியல் ,ஆன்மிகம் ...எதுவாகட்டும் அதை படிக்கும் ,பார்க்கும் ரசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் பணிகளை வாசித்ததினால் கிடைத்தது .... ஹைக்கூவாகட்டும் , சினிமா விமர்சனமாகட்டும் , புத்தகமாகட்டும் , நமக்கு ரசிப்புத்திறன் கூடியது .. சுவாரசியம் அதிகமாகியது.. 


நிறைய இளைநர்கள் இணையத்தில் பதிக்கிறார்கள் . அந்த உந்துதலின் உள் காரணத்தை யோசிக்கிறேன் .. நமக்குள்ளும் நல்ல தமிழ் உள்ளது , நவீனம் உள்ளது , நடை வருகிறது என்ற நம்பிக்கையை யாருக்கு சொல்லிக்கொள்கிறார்களோ இல்லையோ , தனக்கே தனக்கு சொல்ல விரும்புகிறார்கள் . அதை சிறப்பாக செயல் படுத்துகிறார்கள் . எனக்கும் அந்த உந்துதல் பளிச்சென்று வந்து விட்டது ... தமிழ்த்தாயே வணங்குகிறேன் என்று சொன்ன எனது மானசீக எழுத்து ஆசான் சுஜாதாவிற்கு நன்றி கூறி , பார்த்ததை , படித்ததை , ரசித்ததை பகிர்ந்து கொள்கிறேன் .... இனி வரும் பதிவுகளில் .....
Powered By Blogger