Wednesday, August 10, 2011

தொடரும் முன்னுரை தொடர்

முன்னுரை தொடர்பதிவு ஒரு சுற்று வந்து அத்தொடர்க்கு முடிவுரை நெருங்கும் சமயத்தில் அருமை நண்பர் ஆர்.வி.எஸ்  அவர்களின் அன்பழைப்பு  நினைவுக்கு வர  , நேரமும் கூடிவர   சுருக்கமாய் ஒரு பதிவு…….

முன்னுரை பின்னுரை பற்றிய சிந்தனையே இல்லாமல் சுஜாதா எனும் எழுத்து தென்றல்  ஆ.வி.ஜு.வி..சாவி..குமுதம் கல்கி..குங்குமம் என எங்கெல்லாம் வீசியதோ அங்கு போய் வாசிப்பு காற்றாடிக்கொண்டோம்….பின்னாட்களில் மொத்தமாய் வந்த அவரது கதை புத்தகங்களை புத்தககடைகளில் எடுத்து திருப்பும் பொழுது முன்னுரை எனும் பெயரில் சுவாரசியமான ஒரு கட்டுரை கிடைக்கும் ..அதற்காகவே அந்த முழு புத்தகத்தை வாங்கிய நிகழ்வுகளும் உண்டு…. அதில் சில மலரும் நினைவுகளுக்குத்தீனியாக அமையும் …சில ஆச்சரியக்கேள்விகளுக்கு  விடையாக அமையும்……. அம்முன்னுரைகளை கொத்து கொத்தாக அப்படியே மறுபதிப்பதை காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சுவாரசியங்கள்…..

 ’’இரத்தம் ஒரே நிறம் ‘’ சுஜாதா எழுதிய முதல் சரித்திரக் கதை  அந்த முன்னுரையை  அப்படியே எடுத்துப் போட வேண்டும்.. அவ்வளவு சுவாரசியங்கள் …. சுருக்காமல் அப்படியே கொடுத்தால் படிக்கும் எனது சக வாசக சொந்தங்களால் நிச்சயம் வாழ்த்தப் படுவேன் எனும்  உத்திரவாதம்  இருந்தாலும், வலைப்பூவின் மரபு கருதி சுருக்கமாக அந்த முன்னுரையின் சில முத்துக்கள்…

குமுதம் என்னை ‘ சரித்திர நாவல் எழுதி பாருங்களேன் ‘ என்று கேட்ட போது சற்றுத் தயங்கினேன்..சரித்திர நாவல் எழுதுவதற்கு என்று எழுதப் படாத விதிகள் இருக்கின்றனவாம்….சரித்திர நாவலில் சரித்திரம் மட்டும் இல்லாமல், சில தீப்பந்தங்களும் ,உறையூர் ஒற்றர்களும் வேண்டும், கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வர்ணிக்க வேண்டும்.அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்..சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை. தமிழ்ச்சாதியின் மேம்பாடு, கடல்கடந்த நாகரிகம்…இவைகளைச் சொல்வது உத்தமம். குதிரைகளை தாங்கித்தேர்கள், முத்துக்கள் இறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ் , இன்னபிறவும் வேண்டும்.

இப்படியெல்லாம் இந்த நாவலில் எதுவும் இல்லை முதலில் என் தமிழ் நடை சரித்திர நாவலுக்கு ஒவ்வாது என்றுதான் தோன்றியது. அதனால் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது  சிப்பாய் கலகத்தை தேர்ந்தேடுத்து அதைப் பற்றி படிக்க துவங்கினேன். சிப்பாய் கலகம் வடக்கே நடந்திருக்கிறது. தக்காணத்தில் அதன் பாதிப்பு அதிகம் இல்லை. இந்திய சர்க்கார் வழவழப்பான காகிதத்தில் சிப்பாய் கலகத்தில் செத்துப் போனவர்களின் பெயர்களை எல்லாம் பதிப்பித்திருக்கிறார்கள். அதில் தமிழ் பெயர் எதாவது இருக்கிறதா என்று தேடினேன். இல்லை. ஆனால் கர்னல் நீலின் தலைமையில் சென்னையிலிருந்து ராணுவம் , பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்களைக் கொண்டு கலகத்தை அடக்க வடக்கே போயிருக்கிறார்கள் என்கிற செய்தி கிடைத்தது. அவர்களுடன் ஒரு தமிழனை அனுப்பத் தீர்மானித்தேன். ஒரு வெள்ளைக்காரன் மேல் சொந்த வெறுப்பும் வைத்துக் கொண்டு அவனைத் தொடர்ந்து கலகத்தை நோக்கிச் செல்வதாக கதைக் கரு அமைத்துக் கொண்டபோது தமிழன் அங்கு போக எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

இந்த கதையில் வரும் பெரும்பாலன சம்பவங்கள் உண்மையானவை . சென்னை ராணுவம் கல்கத்தா சென்றது அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது  .  வெள்ளை க்காரப்பெண்கள் மாட்டிக்கொண்டது, நாநாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் , தாத்யா தோப்பேயின் வீரம் எல்லாம் நிஜம்தான். இந்த நிஜ சம்பவங்களுக்கு இடையில் என் முத்துக்குமரனையும்  பூஞ்சோலையையும் , பைராகியையும் உலவ விடுவது எனக்கு எளிதாக இருந்தது. அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள் என்றாலும் அவர்கள் பேச்சும் நடவடிக்கைகளும் அவர்கள் நாட்டு பாடல்களும் . அவர்கள் வடக்கே யாத்திரை செய்யும்பொழுது பார்க்கும் காட்சிகளும் சரித்திர ஆதாரமுள்ளவை . ஒரு முத்துக்குமரன் அங்கே போய் அல்லல் பட வாய்ப்புக்கள் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். கற்பனை பாத்திரங்களையும் நிசமானவர்களையும் ஊடாட வைப்பதில் எனக்கு தனிப்பட்ட சந்தோஷம் எற்பட்டது …

படிக்கும் நமக்கு அந்த சந்தோஷம்  நிச்சயமாக இருமடங்காக கிடைக்கும்.


ஸ்ரீரங்கத்துக்கதைகள்  என்பதுகளின் தொடக்கத்திலும்  எழுதியிருக்கிறார்  இருபது வருடம் கழித்து 2000ங்களின் தொடக்கத்திலும் எழுதியிருக்கிறார் இருவகைகளையும் சுடச் சுட படித்தவர்களுக்கு வித்தியாசம் தெரியும்  அவரே அவரது முன்னுரையில் எழுதியிருக்கிறார் படிப்போம்…..


இந்த கதைகளை ஒருமித்து நோக்கும்போது கால வேறுபாட்டினால் ஒரு விதமான சமனற்ற நிலை இருப்பதை கவனிக்கலாம்…இதை எந்த விதத்திலும் திருத்த முயற்சி செய்யவில்லை .


 ஒரு எழுத்தாளன் சிறுகதை எழுதும் போது மூன்றுவிதமான சக்திகள் பின்னனியில் செயல்படுகின்றன.ஒன்று ,அவனுடைய கதை சொல்லும் திறமை ,உத்தி,நடை போன்றவை. இரண்டு அவன் ஞாபகங்கள், மூன்று மாறி வரும் அவன் கவலைகள், எழுத்தின் முதிர்ச்சியால் கால ஓட்டத்தினால் இவைகளில் எற்பட்டிருக்கும் நிதானமான மாற்றத்தை வாசகர்கள் கவனிக்கலாம். கதாபாத்திரங்களின் பெயர்களும் குணாதிசியங்களும் கதைக்கு கதைக்கு மாறினாலும் ஆதாரமான பண்புகளான நட்பு,பாசம்,துரோகம், மோகம் போன்றவைகள் பெயர்களுக்கு அப்பாற்பட்டவை. 


’ஸ்ரீரங்கம் ‘ என்பது metaphor தான். இதை படிப்பவர் ஒவ்வோருவருக்கும் அவரவர் ஸ்ரீரங்கம் உண்டு  இதில் உள்ள மனிதர்களின் பிரதிகள் அவர்கள் வாழ்விலும் இருப்பார்கள். அவர்களை நினைத்து பார்க்க வைப்பதே இந்த கதைகளின் நோக்கம்…near equivalents என்பார்கள்.அந்த வடிவில் இக்கதையில் அத்தனை மாந்தர்களையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள்…

ஒரு சிறுகதை தொகுப்புக்கு பல்சுவையோடு நகைச்சுவை கூடிய முன்னுரை….. எழுதுபவனுக்கு  காண்பதும்  கவனிப்பதும் முக்கியம் என்பது அவர் வரிகளில்.....

எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம் . எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை யோசித்துப் பார்த்தால் கவனிக்க விரும்புவதைத் தான் கவனிக்கிறோம்- நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப , எப்படி?  சொல்கிறேன்.

      சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கர் சங்கீத கச்சேரி. அய்யங்கார் ரொம்ப ரசித்து , தோடி பாடிக்கொண்டிருந்தார்.மாமா என்னை ரகசியமாகக் கூப்பிட்டு ‘’ அவர் என்னத்தையோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே டேய் அது என்னன்னு போய் பார்த்துட்டு வா’’என்றார் . மாமா கவனித்தது தோடியை அல்ல.


      இலக்கிய சிந்தனையில்  கதையின் கதை என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி மேற்கோள்கள் காட்டி , தீவிரமான ஆராய்ச்சி கட்டுரை போல் எனக்கே திருப்தி தரும் படியாக பேசினேன் பேச்சு முடிந்ததும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி ‘’ உங்க பேச்சைக் கேட்டேன் ஏன் அப்பப்ப மூச்சிரைக்கிறது; உங்களுக்கு எதாவது ஹெல்த் பிராப்ளமா? என்றார் அவர் கவனித்தது பேச்சை அல்ல மூச்சிரப்பை மட்டும்.
         
        எனவே கவனிப்பது உடல் நிலையையும் மன நிலையையும் பொறுத்தது. காண்கின்ற எல்லாவற்றையும் கவனிக்க எனக்கு சில வருஷங்களாயின.. கவனித்தது அத்தனையையும் எழுத வேண்டும் என்பதில்லை .எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள்- முக்கியமாக  மானுடம் வேண்டும்...


பின்னுரை-1 : 
எங்கள் ஸ்ரீராம் சற்று நாட்களுக்கு முன், சமிபத்தில் படித்தது எதாவது எழுதினால் தான் ‘’ வாசிப்பு ’’இணையத்தில் நிற்கும் என்கிற வகையில் பின்னூட்டம் தட்டியிருந்தார்..அடிக்கடி படிப்பதை சமிபகணக்கில் வைத்து, அந்த மாங்கனியும் இந்த கல்லிலேயே... ....


பின்னுரை-2 :  சன்ன எழுத்து எனது...வண்ணம் வாத்தியாருடையது...
  


Powered By Blogger