நாம் இந்த வலைப்பூக்களில் எழுதுவதும் ,ஒருவருக்குஒருவர் தொடர்பு கொள்வதும் எதற்கு ? மனதிற்கு ஒரு இதம் ,சுவாரசியம் மற்றும் நம் ரசனைகளுக்கு அழகான வெளிப்பாடு . இதைத்தான் சுஜாதா அவர்கள் எழுத்து துறையிலே செய்தும் செய்யவைத்தும் வந்தார் .
கதையாகட்டும் , கட்டுரையாகட்டும் நம்பி வந்த வாசகனின் ஆர்வத்திற்கு கண்டிப்பாக செய்தி வைத்திருப்பார் . பல துறைகளிலும் உள்ள விஷயங்களை தமிழனுக்கு எட்டவைப்பதில் அவர்க்கு ஒரு தணியாத ஆவல் இருந்தது ..
படைப்புகள் சிலவற்றை பற்றி ஒன்றிரண்டு வரிகள்
சிலிக்கனின் சில்லு புரட்சி --- நாங்களெல்லாம் அப்பொழுதுதான் சில்லுக்கு புதிது ..தினமணி கதிரில் வரும் .. கோவை குப்பகோனாம் புதூர் நூலகத்தில் அந்த புத்தகத்தை எடுத்தவர் எப்பொழுது வைப்போரோ என்று சுற்றியும் ஐந்து பேராவது இருப்போம் .. அப்படியே அறிவியல் , கதை ஆர்வம் கூடி ஆர் .எஸ் புரம் மத்திய நூலகம் வரை சைக்கிளை மிதிக்க வைத்தது .
பிரிவோம் -சந்திப்போம் தலைப்பே கவிதையாக , ரகு, மதுமிதா , ரகுஅப்பா , ராட்.....அவர்களோடும் , அவர்களுக்கான உணர்வுகளோடும் சில காலம் வாழ்ந்தோம் என்று தான் சொல்லவேண்டும் . ரகுவோடு ஏங்கி, மதுமிதாவை ரசித்து ,ரகுவின் அப்பாவிடம் அறிவுரைகள் பெற்று அந்த பொதிகை மலையில் உற்சாகமாக இருந்தோம் . பின் அவளை திட்டி ,ரகுவோடு அமெரிக்கா சென்று , அவளின் அப்பாவித்தனத்திற்க்கு தலையில் அடித்து கொண்டு ஊர் முழுவதும் சுற்றினோம். அவளுக்கு ராட். முலம் கிடைத்த அடிக்கு ''அப்படித்தான் வேணும்'' என்று ஒரு சாரர் நினைத்தோம் , ரகு கண்டுகொள்ளகூடாது என்று ஒரு சாரரும் , அவளை எப்படியாவது ராட் டிடமிரிந்து காப்பாற்றவேண்டும் என்று ஒருசாராரும் , ஒருபடி மேல போய் ரகுவோடு அவள் மீண்டும் இணைந்து விடவேண்டும் ஒரு சாரரும் நினைத்தோம் ... கல்லூரி காலங்களில் எங்களுக்கு கிடைத்த மதிய வேப்பமரத்தடி உணவோடு பகிர்ந்துகொள்ளும் சுவாரசியம் . இன்று படித்தாலும் அதே புத்துணர்வு .
ஏன்? எதற்கு ? எப்படி? - அந்த காலத்திலேயே கூகிள் ஆண்டவரின் பணி. எல்லாவற்றிலும் ஆர்வத்தை கிளப்பியது . மயில் தொகை விரிப்பிலிரிந்து, குவாண்டம் ,ஐன்ஸ்டீன் தியரி என்று பலதுறைகளிலும் மேலும் மேலும் படிக்க வைத்தது. சில மிரண்டு ஒதுங்கிய விஷயங்கள் கூட நட்பாகியது . இன்று ''நேனோ''வ்வையும் ''எம்படட்'' தொழில் நுட்பத்தையையும் திகைப்பு இல்லாமல் நெருங்க முடிகிறது . வரப்போகிற டி.இ. டி ஆறாம் அறிவு ஜல்லியடிகளையும் எதிர் கொள்ளமுடியும்..
ஸ்ரீரங்கத்து தேவதைகள் -அத்தனையும் உற்சாகம் புரளும் கதைகள் , வரிக்கு வரி நகைச்சுவைகள், கடைசியில் தீர்க்கப்படும் மர்மங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..அதில் சோக ரசத்தையும் தவறவிடாமல் ஒருகதை (மாஞ்சு ) வரும் அதில் ஒரே ஒரு வரி அவ்வளவு கூட இல்லை அரை வரியில் படிக்கும் அனைவருடைய இதயங்களையும் ஒரு சுத்திகரிப்பு செய்வார் .. அங்குதான் நாம் '' கதைசொல்லி'' க்கான இலக்கணத்தை பார்ப்போம் .. ( கதை சொல்லி --- நன்றி - எஸ் . ரா வின் பதம் - இனிமையான சொல்லாட்சி)
இப்படி நிறைய இருக்கிறது ...... சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
மற்றவர்களின் சிறப்பான படைப்புகளை அடையாளம் கண்டு சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான் . அதனாலேய ஜெயகாந்தனை படித்தோம் அதன் தொடர்ச்சியாக பாலகுமாரன் அதே ஆர்வத்தில் எஸ் .ரா , முருகன் , என்று பிரபலமானவர்களையும் பின்னர் நன்றாக எழுதும் புதியவர்கள் படைப்பிலும் ரசனையான விஷயங்களையும் ரசிக்க முடிகிறது .
தனிமனித துதி என்று சொல்லிக்கொள்ளும் சுயஉணர்வு சற்று கூடியவர்களுக்கு சொல்லவிரும்புவது , சுஜாதா என்றுமே இயக்கமாகவே இருந்திருக்கிறார். அவரும் அவரை சுற்றிலும் தமிழின் பன்முக ரசனைகள் என்றுமே இருக்கும். அவரை பற்றி பேசுவதோ , எழுதுவதோ நிச்சயமாக நம் ரசனைகளுக்கு , தமிழார்வத்திற்கு போட்டுக்கொள்ளும் துதி.. அப்படியே தனிமனித துதித்தாலும் என்ன தவறு ?
தன் வாசகனின் ஆர்வத்திற்கு , அறிவிற்கு தீனி போட எத்தனையோ தூக்கத்தை இழந்து படித்து,எழுதி இருப்பார் .
கட்டம் கட்ட நினைத்தவர்களிடமும் , ஒரு கட்டத்திற்குள் மட்டும் சிக்க வைக்க முனைபவர்களிடமும் அவர் என்றுமே சிக்கியது இல்லை . சுஜாதா ''அந்த வானத்தை போல '' எல்லோருக்கும் பொதுவானவர் என்பதற்கு அவரை பற்றி வரும் பதிவுகளும் அதன் பின்னூட்டங்களுமே சாட்சி ( சற்றுமுன்னர் கிடைத்த உ -ம் நர்சிம் , ராதா கிருஷ்ணன் .....இன்னமும் வரும் )
வாசகனையும் எழுதவைக்கும் அவர் ஒரு மானசீக எழுத்தாசான் ... வாசிப்போம் ஆனந்தமாக ......