Saturday, August 14, 2010

கடவுளும் நானும் ( தொடர்பதிவின் தொடர்ச்சி)

  கடவுளும்,நானும் சென்ற பதிவின் தொடர்ச்சி........ 
வீட்டில் சைவ சித்தாந்தகளையோ , வைணவ சிந்தனைகளையோ  
பெரிதாக சொல்லித்தராததால், கடவுள்  
எனக்கு ஒரு சுதந்திரமான,சுய தேடலாகவே அமைந்திருந்தது. 
பிரம்ம உபதேசங்களும்  எடுபடவில்லை .          
       சில சமயங்களில்  மனத்தோய்வு நீங்க நமக்கு ஒரு சக்தி தேவை ப்படுகிறது , கற்பிதமோ, மரபணுவில் உள்ள பதிவுகளோ  கஷ்டம் வரும் காலங்களில்,  ஒரு  பெரிய ஆதரவு தேவைப்படுகிறது .

 தீராக்கடன் வேலைவாய்ப்பு , நல்ல நண்பர்கள்,வாழ்க்கைத்துணை குழந்தை வளர்ப்பு, ,அண்டை அயலார் நட்பு / வெறுப்பு , கொடும்நோய் இவற்றில் நல்ல விஷயங்கள் நடக்கவேண்டுமே எனும் எதிர்பார்ப்பிற்கும், அல்ல விஷயங்களிலிருந்து மீள வேண்டுமே எனும் ஆதங்கத்திற்கும்  மனம், நம்மை மீறிய ஒரு சக்தியை தேடுகிறது..

இந்த இனம்  ஒரு புரியா அவஸ்தை / தேடல் என்னை போன்ற சாமனியர்களுக்கு மட்டுமல்ல . பெரும் அரசியல்வாதிகளுக்கும் ,பொருள் வசதி கூடியவர்களுக்கும்  வியாபாரிகளுக்கும் கூட அவர்களுக்கே உரித்தான சூழலிற்கு தகுந்தாற்போல் இருந்திருக்கிறது

அதனால்தானோ, பகுத்தறிவுபாசறையிலிருந்த  நடிகர் திலகம் 
திருப்பதி   வேங்கட நாதனை தரிசிக்க சென்றார்.  மக்கள் திலகம்  
மூகாம்பிகைஅம்மனை தரிசிக்க சென்றார்  அறிஞர் அண்ணா  
ஒன்றே குலம் ஒருவனே தேவன்கொள்கை க்கு வந்தார்   என 
சில சமயங்களில் தோன்றும் 

நல்லதும் கெட்டதும் நண்பர்களாலே,என்பது நான் கண்ட
உண்மை.நட்பிற்க்காக விநாயகர் கோவில் போக ஆரம்பித்தேன்.
வாழ்வில் ஒரு பிடிப்பு வந்ததாக உணர்ந்த நேரம் அது. நடந்த 
நன்மையெல்லாம்  வினாயகர் அருளாலே  என்று நம்ப ஆரம்பித்தேன் 

இப்படியே தொடர்ந்த  வாழ்வில்  மருதமலை முருகனும்  
சேர்ந்துகொண்டார்.  இங்கு வழிபடுதல்,நம்புதல்வேண்டுதல்
 இவையெல்லாம் ஒவ்வொருவருக்கும்  பிரத்யேகமானது 
என்பது புரிய ஆரம்பித்தது .

 என் நண்பன் முருகேசன் தன்னுடய பேனாவில்ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தான் அதில் வாழ்க வளமுடன்  என்றிருந்தது. என்னவென்று விசாரிக்க  ஊட்டியில் பணிபுரியும் பொழுது  அங்கொரு நண்பர் வழியாக அறிந்ததாகவும் , அதில் உடற்பயிற்சி , யோகா , தியானம்  சொல்லித்தருகிறார்கள்  என விஸ்தாரித்தான் .

ஆர்வம் மேலிட கோவையில் யார் இந்தயோகாவை கற்றுத்தருகிறார்கள் என்று தேடினோம் .  ராம் நகரில் சின்னசாமி   ஐயா எனும் பெரியவர், நீண்ட நாட்களாக இந்த யோகா சொல்லித்தருவதாக கண்டுபிடித்து ,இந்த கால கம்ப்யுட்டர்  வகுப்பு மாதிரி, ஒரு   குழுவாக சேர்ந்து  கொண்டோம்  உடற்பயிற்சி முறைகள் சொல்லிக்கொடுத்தார் . ரொம்ப நாள் கழித்துதான்  இந்த யோக கலையை  உருவாக்கியவர்  வேதாத்திரி மகரிஷி எனும் மகான் என்று சொல்லி அவரது புத்தகங்களை அறிமுக படுத்தினார் . அந்த வாசிப்பானுபவம் பல நம்பிக்கைகளை மனதுள் உருவாக்கியது.

குறிப்பாக , அனைவரையும் வாழ்த்த வேண்டும்  என சொல்லியவிதம், அதில் உள்ள அருட்காப்பு முழுக்க முழுக்க அறிவியல் கொண்டு பேராற்றலை பற்றி சொன்ன விதம் ,நம்பிக்கையோடு   உள்ளே பரவ ஆரம்பித்தது நிறைய புத்தகங்கள் , முன்னோர் சொல்லிய விஷயங்களை  மறுக்காமல், ஏன் இதை சொன்னார்கள் ?, எப்படி இதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்? . சித்தரின் பாடல்களின் மறை பொருள் விளக்கம்புராணங்களின்  காரணம்,  சடங்குகளின் சாரம், வானவியல் , நவின அறிவியலின் எல்லை . இவையெல்லாம் எளியமுறையில் விளக்கப்பட்டிருந்தது. எல்லாம் தமிழில் என்பதால் கூடுதல் புரிதல்.

திருமணம் முடிந்தது கற்றதனைத்ததும்  நகலெடுத்து  அவரிடமும்

ஒட்டப்பட்டது .இல்லற வாழ்க்கைக்கு உகந்ததாகவே  அமைய 
பெற்றது என் தனிப்பட்டவாழ்வை பொறுத்தவரை ,சொல்லில்
அடங்கா நன்மைகள் அடைந்தேன்.
வழிவழியாக வந்த வாழ்வின் பழக்கப்பதிவினாலும், ஊரோடு ஒத்துவாழ வேண்டிய விருப்ப நிர்பந்தமும், என் மனையாளை  பக்தி  மார்க்கம் முழுமையாக ஆட்கொண்டது..  இல்லறம் என்பது கருத்தொருமித்தல் தவிர வேறென்ன?,  .என்னுள்  மீண்டும்  ஒவ்வொரு கடவுளர்களாக சேர ஆரம்பித்தார்கள் . இருந்தாலும் அடி நாதமாக வேதாத்திரி மகான் அருளிய  அருட்காப்பும் , வாழ்த்தும்  எனக்கு வழிகாட்டியாக / நண்பனாக இருந்துகொண்டே  வந்தது / வருகிறது. 

 வாசிப்பு  சுவாசிப்பு மாதிரி  கூடவே இருந்தது . இந்த விஷயம்   எனக்கும்   என் மனைக்கும்  உள்ள பெரிய ஒற்றுமைபாலகுமாரனின் புத்தகங்கள் படிக்கப்பட்டனஅதில் கூடு எனும் ஆதி சங்கரரை  பற்றிய கதையில், சங்கரர்   அரசராக  , தன்னையும் சீராக்கி . அரசாங்கத்தையும்  சீர் செய்யும்  சவுக்கடி நடவடிக்கைகள் ( முதல்வன் படத்தில் முதல்வராக வரும்  அர்ஜுன் மாதிரி  - உவமை உபயம் - எனது மனைவி  )  படிக்க படிக்க ஒரு  சிலிர்ப்பும் புத்துணர்வும்  எற்பட்டது . சங்கரரது  பணிகள் எல்லாம் வாசிக்கப்பட்டதுசங்கரரும் வணங்குதலுக்குரியவர்  ஆனார்


( தொடரும்  -அடுத்த பதிவில் முடிக்கப்படும்)









Thursday, August 12, 2010

கடவுளும் நானும்

     கடவுளும் நானும்


இந்த தொடர் பதிவிற்கு  அழைத்த பதிவு எக்ஸ்பிரஸ் , அப்பாவி தங்கமணி  அவர்களுக்கு நன்றி......
``கடவுள்`` மிக சின்ன வயதில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. பல வீடுகளையும் போல் பண்டிகை பலகாரங்களும், வினாயகர் சதுர்த்தி வகை வகையான  கொழுக்கட்டைகளும் உற்சாகம் எற்படுத்தி கடவுளை கும்பிட வைக்கும்.  ஆனால் ``கடவுள் இல்லை `` எனக்குள் பெரிய தாக்கத்தை எற்படுத்தியது. நாத்திகம் ,ஆத்திகம் என்று எதுவும் அறியாத  நிலையில்  விளையாட்டுத்தனமாக ஆரம்பித்து, காரணம் புரியாமல் கடவுள் மறுப்பு திவிரமாகி க்கொண்டது.

ஆலாந்துறையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நட்பு ரீதியாக நண்பர் வீட்டில் கடவுள் உண்டா? இல்லையா?குட்டி பட்டிமன்றம் நடத்தப்பட்டது.. நண்பன் சிவா வும் இன்னொரு நண்பனும்  ``உண்டு`` டீம். நானும் சிவா வின் தம்பி சோமுவும் இல்லை`` டீம் .சிவா வின் அக்கா நடுவர். சிவா எங்கள் வீட்டில் சாமி கும்பிடும் முறையெல்லாம் எடுத்து கூறி வந்தவன்,  எனது நெற்றியில் திருநீறு இருப்பதை பார்த்து தாழிச்சு எடுத்து விட்டான் .
நானும் அவசர,அவசரமாக எழுந்து , இது பெரியவர்களை மதிப்பதற்க்காக , அவர்கள் சொல்பேச்சு கேட்பதற்க்காக என்று சொல்லி , விபூதி எதிலிருந்து வருகிறது என்று சொல்ல சொல்ல ,வாக்குவாதம் இந்த கால சட்டசபை மாதிரி கைகலப்பில் கொண்டு போய்விட, நடுவரக்கா ஓடி ஒளிய , தீர்ப்பில்லாமல் முடிந்தது. 
இப்படி ஒன்பதாம் வகுப்பிலும் தொடர்ந்தது,  பள்ளிமுடிந்து தோட்ட வயல் வழிகளில் நடந்து வரும் பொழுது , கிணற்றில் நீச்சல் அடித்து விளையாடுவது வழக்கம் . கிராமத்தில் அவை எங்களுக்கு நீச்சல் குளங்கள்   30 / 40 அடி உயரத்திலிருந்து அனாயசமாக குதிப்போம்.  ஒரு நாள் அப்படி குதிக்கும்பொழுது ,நான் ``முருகா காப்பாத்து `` என்று சொல்லி குதித்ததை கவனித்த ``உண்டு`` நண்பன்  என்னை ``உண்டுஇல்லை`` ஆக்கிவிட்டான்.
’’நெற்றி விபூதியும் ‘’, ’’முருகா காப்பாத்து’’ம் மாதிரி  சின்ன, சின்ன சம்பவங்கள் பிற்காலத்தில் பல புரிதலுக்கு துணை புரிந்தது.


தொடர்ந்த கிராம வாழ்க்கையில், முருகன் பாடல்களும், கருப்பராயசாமி அபிஷேகங்களும், மாகாளியம்மனுக்கு நீர்யாத்திரைகளும்,  பக்தியான சாமியாட்டங்களும், பாசாங்கான  அருள் கூறல்களும் ஒரு கொண்டாட்டம் என்ற அளவில் இருந்தது.  ஆனால்  ’’இல்லை’’யில்  எதோ இழந்து கொண்டிருப்பது போல்  உணர்வு.
 ஒரு கட்டத்தில் ,  ``இல்லை`` நண்பர்கள் கொஞ்சம் சேர்ந்தார்கள்.  இஞ்சி தின்ற குரங்கு கள்ளும் குடித்த கதையாக எதிலும் அவ நம்பிக்கை ,எனக்கு வாய்த்த இ.நண்பர்களோ வாய் திறந்தால் கெட்ட வார்த்தைகள்,அதுவும் கிராமத்தில் கேட்கவே வேண்டாம்.படிப்பிலும் நாட்டமில்லாமல் போய் விட்டது , பழகுவதற்கும் மக்கள் குறைந்து விட்டார்கள்.


நாளாக ,நாளாக  ’’கடவுள் இல்லை ‘’ பெரும் அவஸ்தை ஆகிவிட்டது , இதிலிருந்து முதலில் வெளி வரவேண்டும் என தோன்ற ஆரம்பித்துவிட்டது .உண்டு ,இல்லை என்பதை விட கடவுளின் தேவை புரிய  தொடங்கியது .

( தொடரும்--விரைவில்)  


பின்குறிப்பு :'' தொடர் பதிவிற்கு தான் அழைத்தேன், தொடரும் பதிவிற்கல்ல''...  இப்படி ஒரு குரல் கனடா நாட்டிலிருந்து கேட்கிறது. படிக்கவரும் நண்பர்களை சீக்கிரம் அனுப்பினால் ,அடுத்த பதிவிற்கு எட்டிப் பார்ப்பார்கள் எனும் ஒரே காரணத்திற்க்காக  பிரித்து போடுகிறேன்.
சிவாஜி எம்.ஜி.ஆர் அவர்களோடு இப்பதிவின் தொடர்ச்சி விரைவில் ....
Powered By Blogger