Wednesday, October 5, 2011

மும்மூன்றாக....மும்மூன்றாக.....



                                 



அன்போடு தொடர பணித்த எங்கள்பிளாக்கிற்கு  நன்றியோடு  சுயப்பிரதாபம்…… 

1..நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.

   நட்பு, வேலை, காலைச்சூரியன்.


2. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.  

    தற்பெருமை ...   சலிப்பு …..  சினம்


3. பயப்படும் மூன்று விஷயங்கள்.

    வஞ்சம் … லஞ்சம்…   பஞ்சம்


4.  உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.   

     புத்தி , , மனம் , அறிவு


5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.

    மடிக்கணினி,   புத்தகங்கள் குறைந்தது இரண்டு, அலைபேசி


6.உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.

  திரையில் …. நாகேஷ் முதல் சந்தானம் வரை…
  நாடகத்தில் … சோ… கிரேஸி என
  எழுத்தில் ……   வாத்தியார் சுஜாதா .. பாக்கியம் ராமசாமி என…


7. தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்
  
 இரவு உணவு எடுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்த்துகொண்டே  புத்தகம் படித்துக் கொண்டே  ( இன்னமும் இரண்டு கொண்டே க்கள் பதிவுக்காக மூன்றுடன் நிறுத்தி விட்டேன்)



8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்
 வாழ்க்கை முடியும் வரை காத்திராமல்  நமக்கு முடியும் போதெல்லாம் 
 கல்விக்கு கஷ்டபடுபவர்கள்…சரியான மருத்துவத்திற்கு அல்லல் படுபவர்கள்… மனம் முழுவதும் நம்பிக்கையோடு பிறவியால் உடல் ஒத்துழைப்பற்றவர்கள்…
இவர்களுக்கு ஆர்ப்பாட்டம் சுயவிளம்பரம் இல்லாமல்  உதவவேண்டும்…..



9.உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.  

 பணியில் ஒருங்கிணத்து  ஆற்றலான குழு உணர்வை எளிதில்   உருவாக்குதல்..
 அதிகம் பேசாமலே  நண்பர்களை ஆட்கொள்தல்..
 சொல்விரர்களை விட செயல்வீரர்களை எளிதில் அடையாளம் காண்தல்

10.  கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:   
   மரணம் …விபத்து… பொய்……


 11.பிடிச்ச மூன்று உணவு வகை
  வெங்காய ஊத்தாப்பம்
  எலுமிச்சை ரசம்
  தயிர் சாதம் உடன் தொட்டுக்கொள்ள வெந்தய வத்தக் குழம்பு….


12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்
(மாறிக் கொண்டே இருக்கும்...  சமிபத்திய முணு முணு மூனு )
ஆசை முகம் மறந்து போச்சே... பாரதி பாடல்
நீயும்  நானும்....மைனா பாடல்
பார்த்த முதல் நாளாய் ....கமல் பாடல்

14. பிடித்த மூன்று படங்கள்?    
பாமா விஜயம்,  ஹேராம்...  அன்பே சிவம்...


 15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?  
 காற்று…..நீர் …. உணவு ……… உடல் வாழ
 மனை .. நட்பு… சுற்றம் ……  மனம் வாழ
வலை.... புத்தகம்..... அலைபேசி ……. உலகத்தில் உழல

16. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?   

முழுசா ஒரு புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததை தொடுவது...
கணிப்பொறியை முழுமையாக கையாள்வது....
நன்றாக எழுதுவது எப்படி என்பதை ....

17. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?   

    இதுவரை இத்தொடர் எழுதாதவர்கள்...
    தொடர்பதிவு ஒவ்வாமையற்றவர்கள்...
    அழைத்துவிட்டானே என்று திட்டாதவர்கள்...

பொறுமையாக படித்ததற்கு  நன்றி நன்றி நன்றி

48 comments:

ஸ்ரீராம். said...

விரும்பும் மூன்று விஷயங்களில் காலைச்சூரியன்...."நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கைக் கொள்வாயடா..." பாடல் நினைவுக்கு வருகிறது!

பயப்படும் மூன்று விஷயங்கள் ரைமிங்காக இருக்கிறது!

புரியாத மூன்று விஷயங்கள்...ந.வெ. மூன்றாம் பாகம் முடிந்ததும் சற்று புரியலாம்!

வாழ்க்கை முடியும் வரை காத்திராமல் நமக்கு முடியும்போதெல்லாம்......அருமை...அருமை பத்மநாபன்.

முழுசாக ஒரு புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததை....எல்லோருக்குமே இது கொஞ்சம் கஷ்டம்தான் போல...எனக்கும் இது கஷ்டம்தான்!

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஸ்ரீ...இப்பெல்லாம் முழுசா ஒரு புத்தகத்தையும் படிக்க முடிவதில்லை...நாவல் கூட தாவி தாவித் தான் படிக்க முடிகிறது...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதில்கள் பத்துஜி!

//முழுசாக ஒரு புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததை....//

இது உங்களுக்கும் இருக்கா? முன்பெல்லாம் நிறைய படிப்பேன். ஒரு புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைப்பதில்லை. இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தையும் தொடர்ந்து படிப்பதில்லை...

இராஜராஜேஸ்வரி said...

ஆனந்த வாசிப்பின் அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி வெங்கட்ஜி ....ஆமாம்ஜி . புத்தக வாசிப்பு இழக்க கூடாத பொக்கிஷம் ... விடா முயற்சியாக தொடரவேண்டும்

பத்மநாபன் said...

உடனடி பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜி மேடம் ...

அம்பாளடியாள் said...

மூன்று மூன்றாக வகைப்டுத்தப்பட்ட முத்துக்கள் அருமை ....
மிக்க நன்றி பகிர்வுக்கு ............

பத்மநாபன் said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்

geetha santhanam said...

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள் -எல்லோருக்கும் பொருந்துமாறு சொல்லியிருக்கீங்க. மோர் சாதம் வெந்தயக் குழம்பு---ம்.. நாக்கு ஊறுகிறது.
//புரியாத மூன்று விஷயங்கள்...ந.வெ. மூன்றாம் பாகம் முடிந்ததும் சற்று புரியலாம்!//
ஸ்ரீராம், ரசித்தேன்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி கீதா மேம் ... கண்டிப்பாக புரியாத விஷயங்களை புரிய வைக்கிறது ந.வெ ...

இராஜராஜேஸ்வரி said...

9.உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.

பணியில் ஒருங்கிணத்து ஆற்றலான குழு உணர்வை எளிதில் உருவாக்குதல்..
அதிகம் பேசாமலே நண்பர்களை ஆட்கொள்தல்..
சொல்விரர்களை விட செயல்வீரர்களை எளிதில் அடையாளம் காண்தல்/

அதிகம் பேருக்கு வாய்க்காத அற்புத திறமைகள்!

பத்மநாபன் said...

மீண்டும் நன்றி ராஜி மேம் ... அப்படித்தான் . குழுவை வலுப்படுத்திவிட்டு செயல்வீரர்களை சுற்றி அமைத்துக்கொண்டு வண்டியோடுது.

அப்பாதுரை said...

நச் நச் என்று தொடங்கி தத்துவமாக முடிந்த மூன்று.
ஒரு புத்தகத்தை முடித்து விட்டு இன்னொன்று.... போரடிக்குமே? பல புத்தகங்களை ஒரே நேரத்தில் தொடங்கி மாற்றி மாற்றிப் படிப்பது அத்தனை புத்தகங்களையும் முழுமையாக படிக்க வைக்கும் என்று ஒரு தியரி உண்டு. குறைந்த பட்சம் பல புத்தகங்களைப் படிக்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும்.. ஓ! அது உங்களுக்குப் பிடிக்காதோ? :)

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை… பல புத்தகம் ஒரே சமயத்தில் கூட பரவாயில்லை.. இப்ப பார்த்தோம்னா தொ(ல்)லை காட்சி பல சேனல்களுடன்,காதில் தலை பேசி… ஒரு கை கணினி விசைப்பலகையில்… மறு கையில் உணவுக்கான தேக்கரண்டி என பல திசைகளுக்கு மத்தியில் ஒரு புத்தகத்தை ஊன்றிப் படிப்பது பெருங்கனவாகிவிட்டது…

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி சீனுவாசன்...வந்துட்டே இருக்கேன் உங்க வலைப்பூவிற்கு.....

ரிஷபன் said...

நச்சென்று மூன்று சொல்லி அசத்தி விட்டீர்கள்

jalli said...

ippaththaan unga blog muthala paarkirean..arputhamaa irukku.

by.jallipatty palanisamy.coimbatore.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ரிஷபன் சார்...

பத்மநாபன் said...

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜல்லி...

தொடர்பில் தொடருவோம்...

மோகன்ஜி said...

அடடா! லேட்டா வந்து விட்டேனே! பதில்கள் மும்மூன்றாய்.. முத்தமிழாய், முக்கனியாய் இருக்கின்றது. நல்ல ரசனை உங்களுக்கு தலைவரே!

பத்மநாபன் said...

வனரோஜா சிற்பத்தை வடிக்கும் பொழுது ஏது நேரம் புரிந்தது ...மிக்க நன்றி.....

சிவகுமாரன் said...

\\வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்//
...
தங்கள் மனம் கண்டு வணங்கத் தோன்றுகிறது. ரசிகமணி ஜி.
எளிமையான மனதை தொட்ட பதில்கள்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி சிவா..சில விஷயங்களில் எண்ணம் சொல் செயல் இவை மூன்றையும் ஒருங்கிணைக்க முயல்கிறேன்..வாழ்த்திற்கு நன்றி...

அப்பாதுரை said...

மூணுல ரெண்டு இன்னிக்கு.. சென்னைக்கு ஜாகை மாற்றிக் கிளம்பும் நண்பர் உபயம். வெங்காய ஊத்தப்பம், தயிர்சாதம், சுண்டைக்காய் வற்றல் குழம்பு. உங்க ஞாபகம் வந்துச்சு. இன்னும் ரெண்டு கரண்டி வற்றல் குழம்பு எடுத்துக்கிட்டேன்.

பத்மநாபன் said...

ஆஹா...ரொம்ப நன்றிங்க...சுண்டக்காய் வத்தக்குழம்பும் தயிர்சாதத்தோட இருந்துட்டா கூச்சம் பார்க்காம தட்டை காலி செய்ய வைக்குமே....

அப்பாதுரை said...

கூச்சம் பாக்காம அடுத்தவங்க தட்டையும் காலி பண்ண வைக்கும்.

பத்மநாபன் said...

ஆமாங்க கூச்சமில்லாமல் குளிக்க வைக்கும் வத்தக் குழம்பு....

ஸ்ரீராம். said...

வத்தக் குழம்பு டிஸ்கஷன் ஓடுது...சுண்டைக்காய் வத்தக் குழம்பு....ஸ்...ஸ்.....ஸ்...ஆ...ஹா... ஓம வத்தக் குழம்பு சாப்பிட்டிருக்கீங்களோ... அப்பாஜி பிடிச்ச ஐட்டங்கள்ள வேறொரு குழம்பு சொன்னது ஞாபகம் வருகிறது!

பத்மநாபன் said...

சும்மா வந்தீங்களா..சுட்ட அப்பளத்தோட வந்தீங்களா..நன்றி ஸ்ரீ...

அப்பாதுரை said...

ஓம வத்தக்குழம்பா? கேள்விப்பட்டதில்லையே ஸ்ரீராம்?!
ரெசிபி இருக்கா?

ஸ்ரீராம். said...

ஓமக் குழம்பு என்பது மணத்தக்காளி வத்தக் குழம்பு மாதிரிதான். வெந்தயக் குழம்புக்கான கலவையில் ஓமத்தை நெய்யிலோ நல்லெண்ணெயிலோ வறுத்து சேர்த்து விட வேண்டும். பருப்புத் துவையல் + சுட்ட அப்பளத்துக்கு செம காம்பினேஷன். இன்னொரு வகையில் மிளகு குழம்பு செய்வது போலச் செய்து பூண்டுக்கு பதில் ஓமத்தை அரைத்து விட்டுச் செய்வார்கள்.

இரண்டு நாட்கள் முன்பு வீட்டில் சுண்டைக்காய் (வத்தல் அல்ல!) வெந்தயக் குழம்பு அல்லது புளிக்குழம்பு! இதிலும் தேங்காய் அரைத்து விட்டு, அரைத்து விடாமல் என்று இரண்டு வகை உண்டு தெரியும்தானே...!! சாதாரணமாக சுண்டைக்காய் சாம்பார்தான் செய்வார்கள்! சுண்டை தவிர மதுரை, திருநெல்வேலி பக்கம் 'மிதுக்க வத்தல்' என்று ஒன்று உண்டு. சுண்டைக்கையிலேயே மதுரை சுண்டைக்காய் என்று ஒன்றும் தனியாக் உண்டு. அதைக் குழம்பில் போட முடியாது. உப்பு மோரில் ஊற வைத்து காயவைத்து வறுத்து மோர் சாதத்துக்கோ, சாதம் பிசைந்தோ (சமயங்களில் காயவைத்த வேப்பம்பூ வறுத்து, அதையும் மணத்தக்காளி வத்தலை வறுத்து அதையும் இதோடு சாதத்தில் சேர்த்தும்) சாப்பிடலாம். செம கசப்பாக இருக்கும்! வயிற்று வழிக்கு நல்லது என்பார்கள்.

இந்த ஓமத்தை வேறு வகையிலும் சாப்பிட்டிருக்கிறேன். முதல் நாள் தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்தை புலிக்க வைத்து அல்லது அப்படியே தண்ணீரை வடிகட்டி விட்டு ஓமத்தை நல்லெண்ணெயில் வறுத்து சேர்த்து கலந்து சாப்பிடுவோம்.

பத்மநாபன் said...

ஓம வத்தக்குழம்பு செய்முறை / விவரங்கள் படிக்க படிக்க நாக்கு துடிக்குது ... நன்றி ஸ்ரீ .. பை தி பை நாளைக்கு இந்திய விஜயம் .. வந்தவுடன் நீங்கள் குறிப்பிட்ட வத்தகுழம்புகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்து விடவேண்டியது தான் ........

ஸ்ரீராம். said...

டைப் செய்து படிக்காமலேயே பின்னூட்டமிட்டதில் எழுத்துப் பிழைகள் மானத்தை வாங்குகின்றன! (நாகேஷ் சொல்வது போல, "வேற என்னத்தை வாங்கறது..."!!!)

"புலிக்க...!! சுண்டைக்கை...!!! வயிற்று வழி...!!!!!!!"

ச்சே...மன்னிக்கவும். புளிக்க சுண்டைக்காய் வயிற்று வலி என்றெல்லாம் திருத்தி வாசித்திருப்பீர்கள் என்று அன்புடன் நம்புகிறேன்!!!

பத்மநாபன் said...

தட்டெழுத்து ஓட்டத்தில் இந்த பிழைகள் சகஜம்.நாம் நேராக எழுதும் காலத்தில் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு ..குறிப்பாக பழைய லை போடுவதற்குள் தாவு கழண்டு விடும்.... தட்ட ஆரம்பித்த பிறகு தான் தமிழே சுகமாச்சு.

அப்பாதுரை said...

ஓம வத்தக்குழம்பு ரெசிபிக்கு நன்றி ஸ்ரீராம். செஞ்சு பாத்துட வேண்டியது தான்.

சுண்டைக்காயில் இத்தனை வகையா! சுண்டைக்காய் சாம்பார் சாப்பிட்டதே இல்லைனு நினைக்கிறேன். வத்தக்குழம்பு தான். சுண்டைக்காய் சாம்பார் என்ன, பாகற்காய் சாம்பார் மாதிரியா?

பழைய சாதத்துல ஓமமா..கேள்விப்பட்டதில்லை.. அதையும் செஞ்சுற வேண்டியது தான்.

வித்தியாசமா எடுத்து விடுறீங்களே... சென்னை வந்தா உங்களை என்ன கேக்கணும்னு தெரிஞ்சு போச்சு :)

சாமக்கோடங்கி said...

ஆர்ப்பாட்டமே இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்கிற வரி என்னை அதிகம் யோசிக்க வைத்துள்ளது.. நன்றி..

சிவகுமாரன் said...

ஓம வத்தக் குழம்புக்கு நன்றி ஸ்ரீராம்.
அப்பாஜி சுண்டைக்காய் சாம்பார் சாப்பிட்டதில்லையா? இத்தனை வருடங்கள் வேஸ்ட் பண்ணீட்டீங்களே அப்பாஜி .

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை ,சிவா.... வலைபிடித்து வர நாள் இவ்வளவு ஆகிவிட்டது... தற்பொழுது இருக்கும் பொள்ளாச்சி மலைப்பிரதேசத்தில் இணையம் அரிது அப்படியே கிடைத்தாலும் அதன் வேகம் அரிது அரிது,,,

சுண்டைக்காய் சாம்பார் சூடாக உசுப்பிவிட்டீர்கள் சிவா... இங்கு காயே இல்லாத வத்தக்குழம்புதான் கிடைக்கிறது..மலைக்காட்டிற்கு அதுவே அமிர்தம்..

அப்பாதுரை said...

நானே சாப்பிட்டதில்லை என்கிறேன்.. அதுல இப்படி வேலைப் பாய்ச்சுறீங்களே, சிவகுமாரன்? ஒரு முறையாவது ஒண்ணா போக மாட்டோமா? பழனி பாதயாத்திரை போறப்ப சுண்டைக்காய் சாம்பார் ஏற்பாடு பண்ணிடுங்க பதிலுக்கு :)

என்ன ரசிகமணியைக் காணோமேனு பாத்தேன்..

பத்மநாபன் said...

நன்றி அப்பாதுரை .... இன்னமும் ஒரு வாரத்தில் சீராக கிடைக்கும் வலைப் பகுதிக்கு வந்து விடுவேன் ... விட்டு போனவற்றை பிடிக்க வேண்டும் ....

சிவகுமாரன் said...

ஆகா காத்திருக்கிறேன் அப்பாஜி
தை மாதம் ... பாதயாத்திரைக்கு தயாரா ?

அப்பாதுரை said...

பாத யாத்திரக்குத் தயார் சிவகுமாரன்.. எந்தத் தை என்பதில் தான்..

அப்பாதுரை said...

எப்படி இருக்கீங்க பத்மநாபன்? உங்க இமெயிலை தொலைத்துவிட்டேன்.. தொடர்பு கொள்ள முடியலே!

geetha santhanam said...

சார், எங்க உங்களைக் காணவில்லையே என்ன ஆச்சு என்று மெசேஜ் கொடுக்கலாமென்ரு வந்தேன். இந்தியாவிலிருப்பதாகப் பின்னூட்டத்தில் படித்தேன். have a nice time in India.

பத்மநாபன் said...

விசாரிப்புக்கு மிக்க நன்றி அப்பாதுரை அவர்களுக்கும் கீதா மேம் அவர்களுக்கும் .. விடுப்பில் இருந்த அரசு வேலையை முழுதாக விடுத்து அயல் நாட்டு பணிக்கே வந்து விட்டேன் ... அரசு பணியில் ஏழு வாரங்கள் மலை வாசம் .. அங்கு இணையத்துக்கு வாய்ப்பே இல்லாத இடம் .. அரசு பணியை பெறுவதில் பாதி கஷ்டம் பணியை விட்டு சுகமாக விலகுவதிலும் இருக்கிறது . இங்கு வந்தவுடன் இணையப் பக்கமே வர இயலாத வகையில் பணி ..விவரம் பின்னர் . விரைவில் மீண்டு வந்து விடுவேன் ... மீண்டும் நன்றி ... mail id kr_padmanaban@yahoo.com

பாரதி நினைவு பதிவு கூட போட முடியவில்லை .. கதவுச்சந்தில் பார்த்தேன் மூ சுழியில் முண்டாசுக்காரரின் நினைவுக்கதையை வெளியிட்டது மகிழ்வாக இருந்தது ...நேற்று பாரதி பாடல்களிலேயே இருந்தேன் .. குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ...பொழுது புலர்ந்தது ... வந்தனா சகோதரிகள் பாடிய ''ஆசை முகம் போச்சே '' நெல்லை கண்ணன் அவர்களின் பாரதி உரைகள் என பாரதி நாளாக நேற்று சென்றது .....

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை ...உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...

Powered By Blogger