Sunday, February 27, 2011

சுஜாதா பத்து



சுஜாதா ஒரு தொடரும் சகாப்தமாகவே இருக்கிறார். அதற்கு கட்டியம் கூறும் வகையில் இந்த வருட சென்னை புத்தக காட்சியில் திரும்பும் கடைகளில் எல்லாம் சுஜாதாவின் புத்தகங்கள் அடுக்கப்பட்டு,  மிக அதிகமாக விற்கப்பட்டதாக  பெரும்பாலான பதிவுகள் மூலம் அறிந்தோம்....
தமிழின் எழுத்தோடும் வாசிப்போடும் என்றும் தொடரும் நினைவில், பல சுவராஸ்யங்களில்  சிலவற்றை பார்ப்போம்..படிப்போம்....
சுஜாதாவின் எழுத்துக்கள் வலியதான எழுத்துருவிலும், எனது மெலிய உருவிலும், சுஜாதா பரி்ந்துரைத்த மற்றவர்களின் எழுத்து பல வண்ணங்களிலும், 
                    
   1.நகைச்சுவை:
                    வாத்தியார் எந்த கட்டுரையிலும் கதைகளிலும் பிரத்யேகமாகவோ  மெல்லிழையாகவோ நகைச்சுவையை கலந்து விடுவார்..
      
சொர்க்கத்தில் நுழைய இரண்டு வாசல்கள் இருந்தன. ஒன்றில் பொண்டாட்டி பேச்சை எப்போதும் கேட்டவர்கள் இந்த வரிசையில் நிற்கவும். மற்றதில் பொண்டாட்டி பேச்சை கேட்காதவர்கள் நிற்கவும்  என்று எழுதியிருந்தது முதல் வாசலில் நுழைய மைல் கணக்கில் க்யூ வரிசை நின்று கொண்டிருக்க மற்றதில் ஒரே ஒரு ஆசாமி மட்டும் பின் கையை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
பேரேடு புத்தகத்துடன் வந்த சொர்க்காதிகாரி அவனை அணுகி  `` நீங்க நிசமாகவே இந்த வரிசையில் நிற்க விரும்புகிறீர்களா ?``
      ஆமாங்க என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னாங்க...

               ********************
    2. கட்டுரைகள்
                     கட்டுரை என்றாலே  முன்னுரை , பொருளுரை , முடிவுரை என்று படிக்கும் காலத்தில் , தலைப்புகளுக்கு அடிக்கோடிடும் ஆர்வம், எழுத்தில்  இருக்காது... சுஜாதாவின் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்த பிறகு  கட்டுரைகளின் சுவாரஸ்ய சுவை  பிடிபட ஆரம்பித்தது.. கட்டுரைகள் பற்றி  அவரது எழுத்தில்....

     கட்டுரைகள் எழுதுவது  எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்..கட்டுரைகளில்தான்  வெளிப்படையாக  எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி தெளிவாக கருத்து சொல்ல முடிகிறது . இருந்தும் மக்கள் கட்டுரைகளைவிட கதைகளையே விரும்பி நாடிச் செல்கிறார்கள். அதற்கு காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்னும் நிலவுகிறது.... அவர்கள் ``நடத்திய`` என்று சொல்ல மாட்டார்கள்  ``நடாத்திய`` என்பார்கள்.சிறந்த என்பதற்கு  விழுமிய என்று சொல்வார்கள். கலந்த என்பதற்கு ``பொறுளிய`` என்பார்கள்.
இதனாலேயே தமிழ் மக்கள் கட்டுரை என்றாலே பயந்து போய் அங்கங்கே ஒதுங்கி கொள்கிறார்கள்..

அறிவியலோ  அரசியலோ  சினிமாவோ சிலப்பதிகாரமோ  சுஜாதாவின் கட்டுரைகள் என்றும் சோர்ந்ததில்லை
                      ********************************************************  
   3 .கவிதைகள் :
                     தமிழை நேசிக்கும் அளவுக்கு, கவிதைகளையும் நேசித்தார். அதனாலேயே  கவிதைகளை தேடிச்சென்று வாசித்திருக்கிறார் ..அவரை தேடியும் நிறைய கவிதைகள் வரும் ...கடந்து செல்லும் கவிதைகளில் சிறந்ததை, எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு எடுத்து சொல்லாமல் விட்டதில்லை.
அவரது பரிந்துரை கவிதைகள் ஒன்றிரண்டு
   எலிப் பொறிக்குள் மனிதர்கள்
   எல்லோருமே
   பிள்ளையாராகிவிட்டோம்
   உலகமே
   எலி வாகனத்தில்
   பயணிக்கிறது
   சிவ பார்வதியை  சுற்றிய
   பிள்ளையாராக
   வாமன வாரிசுகள்
   ஒரடி பெட்டிக்குள் உலகை சுற்றுகிறார்கள்
   கால்களை கழற்றி விட்டுக்
   கை விரல்களால்
   ஊழித்தாண்டவம்
   ஆடுகிறோம்
   அரூப சிலந்தி வலையை
   எலியால் பிறாண்டி
   பிறாண்டிப்
    பிரபஞ்சம் தாண்டித் தேடுகிறோம்
    எலிக்கு மனித வாகனம்
    இருபத்தொன்றில்
    வாழ்க எலி சாம்ராஜ்யம் ...
(ஆண்டாள் பிரியதர்ஷினியின் தினமலரில் பிரசுரமான கவிதை )
       
      செங்கல் சுமந்த
      சாலை கடந்த
      எழைச்சிறுவன்
      சுவர் சுமந்த எழுத்துக்களைப்
      படித்துவிட்டு சிரித்தான்
      இளமையில் கல்..
        (இது கவியரசு வைரமுத்துவின் குமாரர் கபிலன் எழுதியது..) 
 இதை சுஜாதா ஹைக்கூவாக மாற்றுகிறார் பாருங்கள் கீழே....
       சுவரில்  ``இளமையில் கல்``
       அருகே செங்கல் சுமக்கும் சிறுவன்....
மேலும் பரிந்துரைத்த ஹைக்கூக்கள் ஒன்றிரண்டு கொறிப்போம்

   நீண்ட அலகு நாரை
   நீரை கொத்தினாலும் நீங்காத நிலா.......   அமுத பாரதி..
    கலவரத்திலும் புன்னகை
    மாறாமல் சிலைகள்   .............................ஜி.மாஜினி

என்னதான் புதுக்கவிதையயும் ஹைக்கூக்களை பரிந்துரைத்தாலும் அவர் மரபின் விரும்பியாகவே இருந்திருக்கிறார்  அதற்கு அவரே சொல்லும் காரணம்.
மரபை தெரிந்துகொள்ளாமல்  புதுக்கவிதை எழுதக்கூடாது என்று தமிழக அரசு ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் – மரபுக்கவிதை எழுதுவது உரைநடை  எழுத்தாளர்களுக்கும் நல்ல பயிற்சி. சொற்சிக்கனமும் ஒசை நயமும்  தொனியும் கதையில் வரும். ஒரு எல்லைக்கும்  சில விதிகளுக்கும் உட்பட்டு கால்பந்து விளையாடுவது போலத்தான் இது. மைதானத்துக்குள் எத்தனை திறமையை காட்டுகிறார்கள். சங்கப்பாடல்கள் அனைத்தும் சிக்கலான திணை,துறை மரபுகளுக்கு உட்பட்டன இருந்தும் உலக இலக்கியத்தில் வைக்கும் வரிகளை எழுதினார்கள்.  `எத்திசை செல்லினும் அத்திசை சோறே` எனும் ஔவையாரின் வரி ஞாபகம் இருப்பதற்கு காரணம், அதன் கருத்து மட்டுமல்ல... எதுகையும் தான்  காரணம்....
யாதும் ஊரே யாவரும் கேளீர் – இன்றும் பசுமையாக தொடர்வதின் காரணம் புரிந்தது.

                    *****************************
     4 .சங்ககால கவிதைகள் 
                    சுஜாதாவுக்கு புறநானுற்றுப் பாடலின் மீது அலாதிப் பிரியம் இருந்திருக்க வேண்டும் ...அனுபவித்து பாட்டைப் போட்டு , சொந்தமாக விளக்ககவிதையும் போடுவார்.....
  பாரி மகளிர்
``  அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
   எந்தையும் உடையேம் எம் குன்றம் பிறர் கொளார்
    இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
     வென்று எறி முரசின் வேந்தர்  எம்
      குன்றும் கொண்டார் யாம் எந்தயும் இலமே
சுஜாதா :
  அந்த மாதம்  அந்த நிலவில்
  அப்பா இருந்தார் ..கோட்டையும் இருந்தது
  இந்த மாதம் இந்த நிலவில்
  வெல்லும் போர் முரசு மன்னர்கள்
  கோட்டையை பறித்தார்கள்
  அப்பாவும் இல்லை

இப்படி விளக்கப்பாட்டோடு இருந்தால்...புறநானுற்று பாட்டு முழுமையாய் படிக்க யாவர்க்கும் ஆவல் மிகும்.....

                    ***************************
       5 .அறிவியல் :
                    ஏன் ? எதற்கு? எப்படி ?  தமிழில் அறிவியலுக்கு வழுக்கிச் செல்லும் எளிய பாதையாக மாற்றித் தந்தவர்...அறிவியலில் உயிரியல் அவர்க்கு மிகப் பிடிக்கும் .... வித்தியாசமாக   ஆறு அதிசயங்களை  வகைப் படுத்துகிறார் பாருங்கள்...
                அ.. மிக உஷ்ணத்திலும் உயிர் வாழ பழகிவிட்ட நுண்கிருமி    பாக்டிரியாக்கள்.

               ஆ . ஆன்சைடிரிஸ் எனும் வண்டு  தான் உயிர்வாழ    எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள்.
               
                 இ.  ஸ்கேரப்பி எனும் முற்றிலும் புரோட்டினால் ஆன  டி.என்.ஏ.. ஆர்.என்.ஏ  இவை எதுவும் இல்லாமல் பல்கி பெருகும் வைரஸ்கள்....
        
                ஈ. மூக்கில் உள்ள வாசனைகளை கண்டுகொள்ளும் செல்கூட்டம்.  வாராவாரம் தம்மை புதுப்பித்துக் கொள்ளும்  நியுரான்கள். மூளைக்குரியதை  மூக்கில் வைத்திருக்கிறோம்.
                உ.  கரையான் : தனிப்பட்டு எதுவும் அடையாளம் இல்லாத ஜந்து.       குழுவாக இணையும் பொழுது , கரையான் புற்றை சரியான உயரம்,       சரியான வளைவுகளுடன் ஒரு சர்ச் மாதிரி  கட்டும் திறமை குழுவில் யாரிடம் இருக்கிறது என்று தெரியாமல் அனைத்தும் ஒரு உயிர் போல் இயங்கும் அதிசயம்..
                .நம் உலகம்  ..விளக்கமே தேவைப்படாத  அதிசயம்.

இதை படிக்கும் பெரும்பாலோர் மேலும் விஷயஞானமறிய  இணைய ஊர்வலம் வருவோம்.. அங்குதான்  சுஜாதா படிப்பறிவிப்பவராக திகழ்கிறார்..

                                             *****************************
            6.இணையம் : 
                      இணையத்தை பற்றி பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதியது..

நெட்டில் சினிமாப் படங்களைச் சடுதியில் இறக்கிக் கொண்டு  வீட்டுக்குள் பார்க்கும் நாட்கள் வரும்பொது நெட் என்பது பழைய கேபிள் டி.வியின் , சாட்டிலைட் கேபிள் டி.வியின் செயல் பாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது . இதனுடன் இதன் முலம் கிடைக்கக் கூடிய அபாரமான தகவல்கள் வெள்ளம் போனஸ், நமக்கு திகட்டத் திகட்ட மகிழ்ச்சியும் அறிவு புகட்டலும் தரப்போகிறது.

இத்தனை பிம்பங்களையும் அத்தனை பக்கங்களையும் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் மலைப்பாக இருக்கிறது. எங்கேயோ எதோ தப்பு நிகழ்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.

அறிவை அடைவதில் உள்ள சிரமங்கள் நீக்கப்பட்டு விட்டால் அதில் சவால் இருக்குமா ? சந்தேகமாக இருக்கிறது.
இப்படி ஒரு விளம்பரம் வரும் சாத்தியத்தையும் எதிர் பார்க்கலாம் .

உலகிலேயே புதுமையான இணைய இணைப்பு. கால் மணி நேரத்தில் தூண்டிக்கப்படும் . படிப்பதற்கும், உங்கள் குழந்தைகளை திருப்பிப் பார்ப்பதற்கும் , சன்னலை திறந்து நல்ல காற்றை சுவாசிக்கவும் நேரம் தரப்படும் .

அது இப்பொழுது எவ்வளவு உண்மை என்பது  நிதர்சனமாகத் தெரிகிறது... அதுவும் முகபுத்தகம்,  ஆர்கூட் மற்றும் அரட்டை நெட்வொர்க்கில் இருந்து நாமும் வெளியேறி, நமது குமார / குமாரியரையும்  வெளிக் கொணர  படாத பாடுபடவேண்டியிருக்கிறது

                   ******************************************
              7 .அரசியல் :
            இதுவும் பத்து வருடம் முன்னர் எழுதியது.. இன்றும் பொருந்துகிறது

 இந்திய அரசியலிலேயே ஒரு கட்சி முழுத்தவணையும் நீடிப்பது என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் நாம் அரசியலில் முதிர்ச்சி அடையமுடியும்.
        

வேறு தேர்ந்தெடுப்பு இல்லாத அஜனநாயக சூழ்நிலை. மாறி மாறி பழைய ஊழல் காரர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவரும் ஞாபகமறதி சார்ந்த அரசியல், மற்றவற்றயாவது ஒரளவுக்கு மாற்றமுடியும் என்று தோன்றுகிறது. இந்த நந்தி விலகவே இல்லை

இப்பொழுது நந்தி, விலகாத யானையாக மாறிவிட்டது .

                              ************************************************** 
             8.விமர்சனங்கள் : 
                    தானும் கதைகள் எழுதி, பிறர்கதைகளுக்கும் நல் விமர்சனம் எழுதுவது சுஜாதா    நித்தமும் கடைபிடித்த வாடிக்கை... அது வாசகர்களுக்கு நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதாகவே அமைந்தது.
 எழுத்தாளர் புதுமைப்பித்தனைப்பற்றி.....
 புதுமைப்பித்தனைப் படித்ததும் சுதந்திரமாக அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத தைரியம் வேண்டும்..நன்றாக எழுதுபவர்களின் பட்டியலில் உள்ள அனைவரிடமும் புதுமைப்பித்தனின் பாதிப்பு இருப்பதை எந்த கோர்ட்டிலும் நான் சாட்சி சொல்லத்தயார்

தற்பொழுது அதை அப்படியே சுஜாதா என்று தாராளமாக மாற்றிக் கொள்ளலாம்....

இப்படி,சுந்தர ராமசாமி , இரா.முருகன், தோப்பில் மீரான், ஜெயமோகன், போன்ற நிறைய எழுத்தாளர்களை சிலாகித்தும் இருக்கிறார், சிறுகுறைகளை எடுத்துக் காட்டியும் இருக்கிறார்...
                     *****************************************************

            9. சினிமா :
                  அவரது நாவல்கள் படிக்கும்பொழுது  ஓரு சினிமா பார்த்த உணர்வு  வரும் ....ஒவ்வொரு சம்பவங்களை  அழகாக  காட்சியகப்படுத்துவார்.. சினிமாக்காரர்கள்  அவரை  மொத்தமாக குத்தகை எடுத்ததில் ஆச்சர்யமில்லை . தமிழ் சினிமாவின் தற்போதய நிலையை அவரது வரிகளில்...

தமிழ் சினிமா ஒரு நால் ரோட்டில் நிற்கிறது . டெக்னிக்லாக பல சிறப்புகள் பெற்றிருந்தாலும் கதை என்கிற இலாக்கா சவலையாகவே இருக்கிறது. எழுத்து வேலையை முடிக்காமல் காமிராவுக்கு போவது  ஆபத்தானது என்பதை இப்போது உணர்ந்து வருகிறார்கள்... 

    அன்றே அவர் காட்டிய பல `தமிழ்படம்``  காட்சிகளில் இரண்டு

முகூர்த்தத்துக்கு நேரமாறது, பொண்ணை வரச் சொல்லுங்க என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால். பெண் காணாமல் போகப்போகிறாள் என்பதை எதிர்பார்க்கலாம்...

காரில் நேரான ரோட்டில் நேராகப் போனாலும், கதாநாயகி அடிக்கடி ஸ்டியரிங்கைத் திருப்புவாள்...

                    *********************************************************
  10 . எழுத்து   :
                           எழுத்தென்பது எப்படி இருக்க வேண்டும் கடைசி வரை எடுத்துக் காட்டி கொண்டே இருந்தார்..

                   எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது. நெஞ்சிலிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்கு காத்திருப்பது அல்ல.....திரும்ப திரும்ப எழுதுவது .. மகிழ்ச்சியோ வலியோ எழுதுவது எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது எழுதியதில் திருப்தி யடையாமல் இருப்பது ... மேலும் எழுதுவது.....

கடைசிவரை எழுதிக் கொண்டிருந்தார் ... கடைசியாக அப்போலா படுக்கையில் அப்போலா தினஙகள் எனும் தலைப்பில்.... எதார்த்தம் தொனிக்க .....

இன்று 18 ஆவது நாள்.எத்தனை பேருக்கு கவலை,மனக்கஷ்டம்,இதை விதி என்று சொல்வதா,தற்செயல் என்பதா? எப்படியும் இந்த அனுபவத்தை நான் மறக்க்வோ, மீண்டும் தாங்கவோ முடியாது. இனி ஆஸ்பத்திரி பக்கமே வரக்கூடாதபடி பகவான் என்னைக் காக்கவேண்டும்..மனைவியும் மகனும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டதை மறக்கவே மாட்டேன்....வீட்டுக்கு போகவேண்டும். ஒழுங்காக சாப்பிட வேண்டும்....

                                       *************************************
வாத்தியார்,  பல நூறு  விஷயங்களை எழுத்தில்  கையாண்டுள்ளார் ...அதில்  பத்து விஷயங்களை மட்டும் எடுத்து  ஒவ்வொரு  தேக்கரண்டி  அளவு  சுவை பார்த்தோம் ...நிங்களும் வாத்தியாரை படித்தவற்றுள்  பிடித்தவற்றை இந்நாளில் பகிரலாமே...

53 comments:

எல் கே said...

எத்தனை வேண்டுமானாலும் சொல்லலாம் இவ்வாறு. எவ்வளவு முறை வேண்டுமானாலும் சொல்லலாம்

பத்மநாபன் said...

நன்றி எல்.கே.. ஆம் எழுத்தில் இருக்கும் நாம் எழுத்தறிவித்தவரை என்றும் நன்றியோடு நினைவில் கொள்வோம்..

shanmugavel said...

good memories,padmanaban,

சாய்ராம் கோபாலன் said...

Good one

பத்மநாபன் said...

நன்றி ஷன்முகவேல்...நினைவு நாளில் நினைவலைகள்....

பத்மநாபன் said...

நன்றி சாய்.. வலதுகை வைத்தியம் ஆரம்பிச்சாச்சா...

RVS said...

பத்துஜி.. உங்களுக்கு பத்துக்கு பத்து.. ;-)))))))))))) அசத்தலான தேர்வுகள்... ;-))))))))))

RVS said...

ஆமா.. அந்தப் படம் எங்க கிடச்சுது... ;-))) ;-)

பத்மநாபன் said...

நன்றி ஆர்.வி.எஸ்...வாத்தியாரின் கதையை பற்றி அதிகம் சொல்லாமலே பத்து விஷயங்கள் கிடைத்து விட்டது..கதைகளை எடுத்தால் நூறில்தான் நிற்கும்...

அந்த படம் விசா வெளியீடான ``நூற்றாண்டில் இறுதியில் சில சிந்தனைகள்`` எனும் கட்டுரை நூலின் பின்னட்டையில் கிடைத்தது...

அப்பாதுரை said...

சுஜாதா வாசகன் ரசிகன் விசிறி பக்தன் வெறியன்... எந்தப் பரிணாமத்தில் இருக்கிறீர்கள் பத்மநாபன்? :)

எம்எஸ்வியைத் தவிர இப்படி ஒரு தீவிர ரசிகத்தனம் எனக்கு ஏற்பட்டதில்லை (நான் பக்தன் நிலையிலிருந்து இறங்கி ரசிகனுக்கு வந்திருக்கிறேன், இருந்தாலும் எம்எஸ்வி என்றதும் ஒரு சிலிர்ப்பு ஏற்படத்தான் செய்கிறது). உங்கள் சுஜாதா ஈர்ப்பு தொடர்ந்து நிலைக்க வாழ்த்துகிறேன்.

இப்படி ஒரு வட்டம் சுஜாதாவுக்கு இருப்பது தெரியாமல் போனது. மறந்து போன பல சுஜாதாயிசங்களை நினைவுக்கு கொண்டுவந்தீர்கள். நன்றி.

ஆத்ம ரசிகராகிய உங்களுக்காக நான் ரசித்த சுஜாதா பாணி ஒன்று, நினைவிலிருந்து:

"கல்யாணமாகி ஒன்பது வருஷம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். பழக்கமான மௌனம்."

கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, வரலாறு வாசகர்களிடையே வேறுபாடு உண்டு என்பார்கள்.

சுஜாதா ஒரு கதையை மேற்சொன்னபடி தொடங்கியிருப்பார். சிறுகதை வாசகர்களுக்கு இரண்டாவது வாக்கியம் கொக்கி. அந்த இடத்தில் நின்று ஒரு கணமாவது யோசிக்காமல் தொடர்ந்தால் அனேகமாக சிறுகதை வாசகனல்ல. (அதனால் தப்பில்லை)

சுஜாதா இந்த உத்தியை நிறைய பயன்படுத்தியிருக்கிறார். இதைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர் என்று சொல்வேன்.

தீவிர எழுத்தாளர்களைப் பற்றிக் கணையாழியில் சுஜாதா சொன்னதை மிகவும் ரசித்திருக்கிறேன். இப்போது மறந்து விட்டது.

விடுங்கள். உங்களுக்காக ஒரு சுஜாதா நினைவுச் சிறுகதை எழுதினேன் - தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளோடு கோவிந்தா போட்டுவிடலாமென்று நினைத்து. முடித்தால் மூன்றாம் சுழியில் பதிவு செய்கிறேன்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை

வாசகன் எனும் நிலையே பெரிய கௌரவம்..அந்த நிலை தொடரவே விருப்பம் .மற்ற நிலைக்குப் போனால் எழுத்தை மறந்துவிடுவோம்...


//"கல்யாணமாகி ஒன்பது வருஷம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். பழக்கமான மௌனம்."// எழுத்தில் காட்சி...

எனோ கணையாழிப்பக்கம் போகவில்லை..விகடன் போன்றவையும் கட்டுரை புத்தகங்களையுமே இன்னமும் படித்து முடியவில்லை....


//மூன்றாம் சுழியில் பதிவு செய்கிறேன்.// மும்மடங்கு மகிழ்ச்சி உங்கள் கதை+ சுஜாதா நினைவு+ மூன்றாம் சுழி... உடனே வெளியிடுங்கள் ..`ண` வாசகர் வட்டத்தின் சார்பில் ஒரு பெரிய `ஓ`

தக்குடு said...

அருசுவையான கருத்துக் கோர்வை பத்துஜி! 10 வாத்தியார் புத்தகங்களை ஜூஸாக்கி ஒரு லோட்டாவில் குடித்தது போல் ஒரு உணர்வு. உங்கள் எழுத்தில் சாதாரணமாகவே ஒரு நிதானமான ஈர்ப்பு இருக்கும், அதுவும் இன்று பெளர்ணமி நிலவொளியில்,கார்த்திகை தீப வெளிச்சத்தில் காணும் ஒரு சிறு பெண் குழந்தையின் பளிச்சிடும் கண்கள் போல் உள்ளது.

வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் ஒளியின் காரண கர்த்தாவுக்கும்...:)

எல் கே said...

http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_28.html


உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்

பத்மநாபன் said...

ரொம்ப நன்றி தக்குடு..வர்ணனயை ரசித்தேன்... நானென்னல்லாம் துணிஞ்சு இரண்டு வார்த்தை எழுதுகிறேன் என்றால் அது சுஜாதாவை வாசித்ததனால் தான்... அவரது பன்முக எழுத்தில் பத்துமுகம் மட்டும்...

பத்மநாபன் said...

தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி எல்.கே.. வி....ரை.....வில்

geetha santhanam said...

சுஜாதா அவர்களுக்கு நல்ல நினைவு கூறல். அவரை 'எழுத்தறிவித்தவன்' என்று கூறியது ரசிக்க வைத்தது.
சுவாரஸ்யம், சன்னமான, பிரத்யேகம், மையமாகச் (சிரித்தான்) என்று பல சொற்கள் எழுத்துலகில் பிரபலமானதற்குக் காரணமானவர்

ஸ்ரீராம். said...

சுஜாதா என்ற சுவாரஸ்யக் கடலிலிருந்து சில துளிகளை ரசிக்கக் கொடுத்திருக்கிறீர்கள். அலுக்காத எழுத்துக்கள். முதலில் அவரது கதைகளைப் படித்துக் கொண்டிருந்தாலும் இப்போதெல்லாம் அவர் எழுதிய கட்டுரை வடிவப் புத்தகங்களையே விரும்புகிறேன். நூற்றாண்டின் இறுதியில், ஓரிரு எண்ணங்கள், தமிழ் அன்றும் இன்றும், எழுத்தும் வாழ்க்கையும் இப்படி.

அப்பாதுரை கதைக்கு மூன்றாம் சுழியில் காத்திருக்கிறேன்.

பத்மநாபன் said...

நன்றி கீதா மேடம்... நீங்க குறிப்பிட்ட மாதிரி சொற்பிரயோகங்கள் ..கதை படிக்க அலுக்கவே அலுக்காத நடையமைப்பு இதெல்லாம் வாத்தியார் எழுத்திலிருந்து கற்றுக்கொண்டவை தான்,

பத்மநாபன் said...

ஆமாம் ஸ்ரீ..சுவாரஸ்யக்கடல்தான் சுஜாதா... நானும் கட்டுரை பக்கம் தான் அதிகம் இருக்கிறேன்... ``கற்றதும் பெற்றதும்``க்காகவாது இறைவன் அவர்க்கு ஆயுள் நீட்டிப்பு வழ்ங்கியிருக்கவேண்டும்..தன் பக்கம் சுவாரஷ்யம் வேண்டும் என்று இழுத்துக்கொண்டாரோ இறைவன் எனத் தோன்றுகிறது....

அப்பாதுரை said...

"கற்றதும் பெற்றதும்" புத்தகமா?

மோகன்ஜி said...

உங்கள் தேர்வு ஒரு அழகான ஹாரமாய் அமைந்து விட்டது. சுஜாதா புதுமைப்பித்தனைப் பற்றி சொன்னது அவர்க்கும் பொருந்தும் என்பது எவ்வளவு உண்மை?

உங்களுக்காய் ஒரு சுஜாதா பிட்.கேள்வி பதிலில் சுஜாதாவிடம் கேட்கப் பட்ட கேள்வி.

"வீட்டில் இருந்து கொண்டே ஹரிஹரனின் பாட்டைக் கேட்கிறோம்....பார்க்கிறோம்...
ஐஸ்வர்யாராயின் கூந்தல் வாசனையை உணரும் சாத்தியக் கூறு உண்டா?

சுஜாதா:டெக்னாலஜிப்படி சாத்தியம் என்றாலும்,அதற்காகும் செலவுக்கு ஐஸ்வர்யாராயை வரவழைத்து வாசனை பார்த்து விடலாம்.

பத்மநாபன் said...

கற்றதும் பெற்றதும் ....விகடனில் சுஜாதாவின் கற்று பெற்ற விஷயங்களை எழுதுவார்.. நிறைய கூட்டுகுடும்பங்களில் விகடன் வெளிவந்த நாட்களில் இந்தபகுதிக்காகவே போட்டியில் விகடன் கிழிபடுதல் நடக்கும் ..இந்த சுவாரஸ்யங்களை தொகுத்து ,விகடன் உட்பட நிறைய பதிப்பகங்கள் பாகம் பாகமாக புத்தகங்கள் போட்டு விற்றுத்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்..

பத்மநாபன் said...

மிக்க நன்றி மோகன்ஜி.. நீங்கள் சுஜாதாவின் இலக்கணத்தோடு மரபு கவிதைகளை பகிர்ந்ததை ரசித்திருப்பீர்கள்...

கேள்வி பதில் அட்டகாசம்... எப்படி தியேட்டரில் சரியான நேரத்தில் வாசம் வரவைப்பது என்பதையும் ஒரு கட்டுரையில் விஸ்தாரித்திருப்பார்..

அப்பாதுரை said...

நன்றி.
ஜவஹர் பதிவோட தலைப்பு இப்ப புரியுது.

Anonymous said...

சுஜாதா ஒரு சகாப்தம்;அவரைப்பற்றிய பதிவு அருமை.

பத்மநாபன் said...

முதல் வருகைக்கு நன்றி குறட்டைப்புலி..உங்கள் முகப்படத்தில் செல்போனுடன் துள்ளும் பையன் அருமை...

இளங்கோ said...

சுஜாதாவைப் பற்றி அழகாகத் தொகுத்து சொல்லி இருக்கிறீர்கள். எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அண்ணா.
அவருடைய எழுத்துக்கள் தான் எவ்வளவு எளிமையாக இருக்கிறது.

பத்மநாபன் said...

நன்றி தம்பி இளங்கோ... பிரிவோம் சந்திப்போம் -ல் பிடித்த அவரதுஎழுத்து, நிறைய கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் வழி கோல்கிறது..வாசிப்பு பழக்கத்தை நிலைநிறுத்துகிறது.

பத்மநாபன் said...

நன்றி தம்பி இளங்கோ... பிரிவோம் சந்திப்போம் -ல் பிடித்த அவரதுஎழுத்து, நிறைய கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் வழி கோல்கிறது..வாசிப்பு பழக்கத்தை நிலைநிறுத்துகிறது.

கோலா பூரி. said...

ஆமாங்க, சுஜாதா ஒரு சகாப்த்தம் தான்.ஒரு பதிவில் அடக்கி விட முடியாதுதான். தமிழ் படிக்கும் அனைவரையுமே சுஜாதா தன் எழுத்தால் வசீகரித்துள்ளார்.

பத்மநாபன் said...

நன்றி கோமு.. அதுதான் நன்றியோடு சில பகிர்வுகள் ..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஆமாங்க என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னாங்க//
ஹ ஹ...படிச்சுருக்கேன் இது... :)

//சுஜாதாவின் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்த பிறகு கட்டுரைகளின் சுவாரஸ்ய சுவை பிடிபட ஆரம்பித்தது//
அதுக்கு முக்கிய காரணம் கட்டுரையின் களம் தான்... அதோட நெறைய அறியாத விஷயங்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கூட...

// .அறிவியல் //
மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசபடுத்தி காட்டியது இது தான் என நினைக்கிறேன்... சிறு வயதில் டிவியில் பார்த்த "மீண்டும் ஜீனோ" "Twinkle Twinkle little star" போல் பசுமரத்தில் பதிந்த ஆணி...

//நிங்களும் வாத்தியாரை படித்தவற்றுள் பிடித்தவற்றை இந்நாளில் பகிரலாமே//
உங்கள விட நல்லா சொல்ல முடியும்நு தோணல...சூப்பர் போஸ்ட்...:)

அப்பாதுரை said...

படிச்சுக் கோவிக்க மாட்டீயளே?

பத்மநாபன் said...

நன்றி தங்கைமணி.... உங்களுக்கு நேரம் கிடைத்தால், சுஜாதாவிடம் பெற்ற வாசிப்பு நினைவுகளை இதைவிட அழகாக கோர்ப்பீர்கள்..

பத்மநாபன் said...

கோவிப்பதற்கு ஒன்றுமில்லை அப்பாதுரை.. நீண்ட நெடுநாட்களாய் வாத்தியாரை படித்தாலும் ,இப்படியெல்லாம் எழுத முடியவில்லையெ எனும் தாழ்வு மனப்பான்மை மிஞ்சியது....

வாத்தியார் நினைப்பை கனப் பொருத்தமாக வெளியிட்ட கதைக்கு நன்றி....

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்!

பத்மநாபன் said...

நன்றி ரவி....

Prabu Krishna said...

சரியான நாளில் பதிவிட்டு உள்ளீர். தாமதமாக படித்தாலும் படித்துவிட்டேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

மிகவும் நன்றி நண்பரே !!!

சிவகுமாரன் said...

அருமையான நினைகூறல் ரசிகமணி. சுஜாதாவின் வெண்பா விருப்பத்தையும் , சொல்லி இருக்கலாமே.
(வலைப்பக்கம் வரக் காணோமே ஏன்)

பத்மநாபன் said...

பலே பிரபு பலே,பிரபு மகிழ்ச்சிக்கும் இனிய வருகைக்கும் மிக்க நன்றி....

பத்மநாபன் said...

வணக்கம் சிவா....வாத்தியாரின் வெண்பா விருப்பத்துக்கு ஒரு தனிப் பதிவே போடாலாம்...சீரை மதித்து தளைதட்டாமல் வெண்பா இலக்கணத்தை ஒரு பெரிய கட்டுரையை வடித்திருக்கிறார் மீண்டும் அதை தேடி படிக்கும் ஆர்வத்தை உங்கள் பின்னூட்டம் தூண்டியுள்ளது..

வலை விரதத்திற்க்கு காரணம் ..ஒரு பணிமாற்றத்திற்கு தயார் செய்யும் பணியில் தீவிரமாக இருந்த காரணத்தால் ..எல்லாம் சுகம் மீண்டும் வந்து பணியில் சேர்ந்துவிட்டேன் ..இரண்டொரு நாளில் நண்பர்கள் அனைவரையும் வலையில் வட்டமிடவேண்டும்...

தமிழ்த்தோட்டம் said...

அருமையான பகிர்வு

பத்மநாபன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்....

Matangi Mawley said...

naan avvalavaaka thamizh puththagangal padiththathillai... aakave enakku intha pathivu mikavum payanullathaaka irunthathu. ippothu thaan 'srirangaththu kathaikal' puththakam vaangi vaiththuk kondu padikkath thuvanguvatharkku naal paarththukkondirukkiren...

crisp and clean...
thanks!

பத்மநாபன் said...

நன்றி மாதங்கி... தமிழ் புத்தகங்கள் படிக்காமேலேயே உங்கள் பதிவுகளில் வெளுத்து வாங்குகிறீர்கள்..சுஜாதா படித்தால் உங்களை பிடிக்கமுடியாது.. ஸ்ரீரங்கத்து கதைகள் நல்ல ஆரம்பம் குறும்பு கொப்பளிக்கும் கதைகள் எவ்வளவு முறை படித்தாலும் சலிக்காது....

மோகன்ஜி said...

பணிமாற்றம் அங்கேயே தானா? வசதியாக உள்ளதா? ஊரில் அனைவரும் நலம் தானே?

பத்மநாபன் said...

நன்றி மோகன்ஜி ...இதே இடத்தில் வேறு நிறுவனத்தில்.. அனைவரும் சுகம்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||"கல்யாணமாகி ஒன்பது வருஷம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை எதிரெதிரே உட்கார்ந்திருந்தார்கள். பழக்கமான மௌனம்."||

இந்தக் கதை நீலப் புடவை ஒரு ரோஜாப் பூ என்று நினைவு.

திருமணமாகி 10 வருடங்களில் சேர்ந்து இருக்கும்,பேசும் நேரங்கள் குறைந்து போய்,கணவன் மனைவி இருவரும் பேனா நண்பர்களில் ஆறுதல் தேடத் தலைப்பட்டு,ஒருவர் இன்னொருவரையே பேனா நண்பராக்கி,நேரில் சந்திக்க பூங்காவில் நாள் குறித்து,சந்திக்கப் போகும் நாளில் மனைவிக்குத் தன் பேனா நண்பன் தன் கணவன்தானோ என்ற சந்தேகம் உறுதிப்பட்டு சந்திப்பு தவிர்க்கப்பட,நடக்காத சந்திப்பால் டென்ஷனாகும் கணவன் தன் பேனா நண்பிக்கு சமாதானம் செய்யக் கடிதம் எழுத முற்படும் போது படுக்கையில் கிடக்கும் களைந்து போடப்பட்ட நீலப் புடவையையும் ரோஜாப் பூவையும் பார்ப்பதில் முடியும் கதை!

கதையல்ல அது,முகத்தில் அறையும் கவிதை.

சுஜாதா பல சிறுகதைகளை எழுதவில்லை,நெய்திருப்பார் என்று தோன்றுகிறது !

பத்மநாபன் said...

அப்பாதுரை அவர்கள் ரசித்ததை அழகாக சொன்னார் .... அறிவன் ..அதை நீங்கள் எடுத்து அட்டகாசமாக பாலிஷ் போட்டுவிட்டீர்கள் ..
//சுஜாதா பல சிறுகதைகளை எழுதவில்லை,நெய்திருப்பார் என்று தோன்றுகிறது // இதை படித்தவுடன் படித்ததாக இருந்தாலும் பரவாயில்லை என்று உடனே பத்து புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது ....

Venki said...

Nan yedechiyaga intha post parthen. it was fabulous. entha oru nigazvugal nadanthalum "ippothu sujatha sir irunthal enna ezhuthiruppar" endru ninaika thondrugiruathu...ethavavathu oru vishayathil avarai ninaikatha naal illai...thanks for bringing back the memories... ippozuthum kuda avarai oru murai kuda neril santhika mudiyavillaye endru varutham irunthu konde irukirathu...sorry for typing in english and tamil..I have no idea how to get tamil font...

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி ... நீங்கள் சொன்னது மிக சரி .. எந்த விஷயமா இருந்தாலும் இதை வாத்தியார் எப்படி சொல்லுவார் எனும் ஏக்கம் மிஞ்சியே நிற்கிறது .. தமிழில் அடிப்பது எளிது வெங்கி ... NHM writer எனும் மென்பொருள் வலையில் இலவசமாக கிடைக்கிறது ..உங்கள் கணினியில் தரவிறக்கி அமைத்து தட்ட ஆரம்பித்து விடலாம் .. பொது கணினியாக இருந்தால் ஜிமெயில் யே மொழி மாற்ற வாய்ப்பு உள்ளது SUBJECT க்கு கிழே அ அல்லது A யை கிளிக்கினால் பல மொழிகள் வரும் தமிழை தேர்ந்து எடுத்தால் அ பளிச்சென மாறும் ..பின் தமிழில் தட்டலாம் . இது ஒலி மொழியாக தட்டும் வழி அதாவது anbu ..... அன்பு ..... aadu ....... ஆடு என காவியம் படைக்கலாம்....பின்னர் எங்கு வேண்டுமானாலும் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம் ..... வாழ்த்துகள் ..
சரி உங்கள் வலைப்பூவை திறக்க முடியவில்லையே ....

Unknown said...

திரும்பவும் அழுகைதான் வருது. வேறு யாராவது தன் வாசகர்களை ரசிகர்களை இவ்வளவு தூரம் பாதித்து இப்படி ஏங்க வைத்திருக்கிறார்களா? நான் நினைக்கிறேன், அவருடைய ஒவ்வொரு வாசகனும் தன் நினைவும் மூச்சும் உள்ள வரை அவரை நினைப்பான். நினைக்கும் போதெல்லாம் இதே தொண்டை அடைக்கும் உணர்வு கொஞ்சமும் குறையாமல் ஏற்படும். எப்படி ஐயா இந்த மாதிரி ஒரு உறவை ஏற்படுத்திவிட்டு விட்டுச்சென்று விட்டீர்கள்?

பத்மநாபன் said...

மிக்க நன்றி மணி ....வாத்தியாரின் வாசகருக்கே உரித்தான உணர்வை மிகச் சரியாக சொன்னீர்கள் ...என்ன செய்வது விட்டுச் சென்றதை நன்றியோடு கண்ணீர் மல்க படித்து கொள்வது தான் ஆறுதல் ....

Powered By Blogger