Monday 16 August 2010

கடவுளும் நானும் ( தொடர்ச்சி)

கடவுள் பற்றி எங்கு பேச்சு வந்தாலும், அறிவியல் ஆதரவிற்கு 
அழைக்கப்படும் அல்லது மறுப்பதற்கு அழைக்கப்படும்.

அறிவியல் கொண்டு ,ஒரு எல்லை வரை தான் போக முடிகிறது.
எவ்வளவோ  அறிவியலில்  கண்டுபிடித்தாலும் , ஒரு அணுவிற்குள் அந்த அடிப்படையான ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பதை  கண்டுபிடிப்பதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 


நாம் வசிக்கும் பூமி ,  தனக்கு தானே  தினம் ஒருமுறை சுற்றி , சூரியனையும் ஒரு நீள் வட்டப்பாதையில், 231/2 பாகை  அச்சில் சாய்ந்து  , நேனோ வுக்கு நேனோ நொடி சுத்தமாக துல்லியம் பிசகாமல் சுற்றி  வருவதற்கு, ஆற்றல் எங்கிருந்தது கிடைக்கிறது  என்பதிலும் வியப்பு தான்  மிஞ்சுகிறது.

இயற்கையில் உள்ள ஒழுங்கமைப்பான  இந்த ஆற்றலை
உணரும்பொழுது ,   நம்முடைய ``உண்டு/ இல்லை ``விளையாட்டெல்லாம்  ஒரு வேடிக்கை  ஆகிவிடுகிறது.
ஒரு பெரிய சக்தி நம்மை வழி நடத்துகிறது எனும் நம்பிக்கை, இடையிடையே வரும் தளர்வுகளின் பொழுது கூடுதலாகிறது. தளர்வுகளிலிருந்து மீண்டவுடன் அந்த நம்பிக்கை இன்னமும் கூடுகிறது.
அந்த நம்பிக்கை ,நிறைய சம்பவங்களில் மனநிறைவை தருகிறது.
இச்சம்பவங்களின் முடிவைக்கொண்டு, நான் அறிவியலில் 
விடைதேடி,தோற்கும் பொழுது, எனது இல்லத்தரசி பக்தியில் 
விடை நிதர்சனமாக்கப்படுவதை எடுத்து வைப்பார்.
கடவுள் பெயர் கொண்டு சுய நலத்தில், முறையற்ற செயல் செய்பவர்களும், கடவுளை மறுத்த சிலர் ,அதே செயல்களை தமக்குத்தான் அந்த உரிமம் என்று நினைத்து செய்பவர்களும் எங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இப்படித்தான் கடவுள் இருக்கவேண்டும் என்ற முரட்டு பிடிவாதம் வைத்துக்கொள்ளவில்லை. உள்ளபடி கிடைத்ததில் ஒரு பெருமிதம்.
அந்த ஆற்றல் எப்பொழுதும்  நம் இணைப்பிலேயே  இருக்கிறது . 
அந்த இணைப்பை இன்னமும் பலப்படுத்திக்கொள்ளவேண்டுமே 
என்று  நித்தமும் ஒரு முயற்சியில் இருக்கிறோம் .
அந்த முயற்சி எங்கள் வீட்டில் சுப்ரபாதம் கேட்டு , அபிராமி அந்தாதி சொல்லி, விளக்கு ஏற்றி வழிபாடாக நடக்கிறது.
பக்கத்தில்  அப்துல் சையது வீட்டில்   ''நடப்பவை எல்லாம் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வின்  விருப்பமாக `` தொழுகையாக நடக்கிறது .
அதற்கு பக்கத்தில்  ஐசக்  வீட்டில்  ``கிறிஸ்துவின் பலம் பெற்ற எங்களால் எல்லா நன்மைகளும் செய்யமுடியும் ``என ஜபமாக நடக்கிறது. 




இத்தொடர்பதிவு,நல்ல நினவுகளை நினவு படுத்தியது, தெய்விக உணர்வோடு மனதை இதமாக்கியது.  அழைத்த அப்பாவிதங்கமணி அவர்களுக்கு மிண்டும் நன்றி.
 இந்த தொடர்பதிவு இட நான் அன்புடன் அழைப்பது. ஜெகன் அவர்களையும், 
அபுதாபி அநன்யா மஹாதேவன்  அவர்களையும்.
நேரம் கிடைக்கும் பொழுது அவர்கள் இத்தொடர் பதிவு இடலாம்.


நன்றி......